Thursday, September 27, 2012

கூரான பொருள் குத்துவது ஏன்?

கூரான பொருள் குத்துவது ஏன்?


pin
கூரான ஊசி, பொருட்களின் ஊடே ஏன் சுலபமாகத் துளைத்துக்கொண்டு செல்கிறது என்று நீங்கள் வியந்ததுண்டா? துணியின் வழியாகவோ, அட்டையின் வழியாகவோ கூரான ஊசியை எளிதாகச் செலுத்த முடிகிறது. ஆனால் மழுங்கலான ஆணியைச் செலுத்துவது மிகவும் கடினமாயிருக்கிறதே, ஏன்? கூரான ஊசியைச் செலுத்தும்போது முழுச் சக்தியும் அதன் முனை மீது செலுத்தப்படுகிறது. ஆனால் மழுங்கலான ஆணியின் முனையின் பரப்பு அதிகமாயிருப்பதால் அதே சக்தி அதிகப் பரப்பின் மீது செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, அதே சக்தியைச் செலுத்தினாலும், மழுங்கலான ஆணியால் எளிதாக துளைத்துச் செல்ல முடிவதில்லை.
அழுத்தத்தைக் குறிக்கும்போது சக்தியின் அளவை மட்டுமின்றி, அது செயல்படும் பரப்பின் அளவையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
ஒரு நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று சொன்னால் அதிலிருந்து இது அதிகமா, குறைவா என்று கண்டுகொள்ள முடியாது. ஏனெனில் இச்சம்பளம் மாதத்துக்கா, வருடத்துக்கா என்று நமக்குத் தெரியாது. அதுபோலவே ஒரு சக்தியின் செயல், அது ஒரு சதுர சென்டிமீட்டர் மீது பரவியுள்ளதா, ஒரு சதுர மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்குப் பரப்பின் மீது பரவியுள்ளதா என்பதைச் சார்ந்திருக்கிறது.
பனிச்சறுக்கு மட்டைகள் நம்மை பொலபொலப்பான வெண்பனியின் மீது எளிதில் எடுத்துச் செல்கின்றன. அவை இல்லாவிட்டால் நாம் பனியினுள் அழுந்திவிடுவோம். ஏன்?
பனிச்சறுக்கு மட்டைகளை அணிந்துகொள்ளும்போது உடல் எடை அதிகப் பரப்பின் மீது பரவியுள்ளது. மட்டைகளின் பரப்பு, நமது உள்ளங்கால்களின் பரப்பை விட 20 மடங்கு அதிகமாயிருக்கிறது என்று வைத்துக்கொண்டால், மட்டைகள் அணிந்திருக்கும்போது வெண்பனியின் மீது நாம் செலுத்தும் அழுத்தம், அவை இல்லாமல் இருக்கும்போது செலுத்தும் அழுத்தத்தை விட 20 மடங்கு குறைவாக இருக்கும். ஏற்கனவே கூறியபடி, பனிச்சறுக்கு மட்டைகளை நாம் அணிந்துகொண்டால்தான் வெண்பனி நம்மைத் தாங்கும். அவை இல்லாவிட்டால், பனியினுள் நாம்புதைய வேண்டியதுதான்.

No comments: