Thursday, September 27, 2012

ஆர்ட்டிக் பனி 10 ஆண்டுகளில் மறையும்!

ஆர்ட்டிக் பனி 10 ஆண்டுகளில் மறையும்!


ஆர்ட்டிக் கடலில் காணப்படும் பனிப் படிவுகள் அடுத்த 10 ஆண்டுகளில் முற்றிலுமாக மறைந்து போகும் என்று பயமுறுத்துகிறார்கள் விஞ்ஞானிகள்.
உலக வெப்பமயமாதல் காரணமாக, பனிக் கண்டங் களில் பனி உருகிவருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றாலும், 10 ஆண்டுகளில் முற்றிலுமாக `ஒன்றுமில்லாமல்' போகும் என்பது, முன்பு கணிக்கப்பட்டதையும் விட விரைவானது. சரியாகச் சொல்வதென்றால், 50 சதவீத அதிக வேகம்.
விஞ்ஞானிகள் ஒரு குத்துமதிப்பான கணிப்பின்படி இப்படிக் கூறிவிடவில்லை. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பின் `கிரையோசாட்-2' என்ற செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியிருக்கும் புகைப்படங் களின்படி, ஆர்ட்டிக் கடலில் கடந்த ஓராண்டில் மட்டும் 900 கன அடி கிலோமீட்டர் பரப்பளவுக்கு பனிப் படிவுகள் காணாமல் போயிருக்கின்றன. பூமியின் இரு பனிக் கண்டங்களில் பனி அடுக்குகளின் தடிமனை அளவிடுவதற்கு என்றே விசேஷமாக அனுப்பப்பட்ட செயற்கைக்கோளாகும் கிரையோசாட்-2.
தற்போது, ஆர்ட்டிக் பகுதியில் பனிப் படிவுகள் முன்பு கணிக்கப்பட்டதை விட வேகமாகக் கரைந்து வருவது, உலக வெப்பமயமாதல் இப்பகுதியில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது என்று காட்டுகிறது.
இதே நிலை தொடர்ந்தால், குறிப்பிட்ட ஆண்டுகளில் இங்கு கோடை காலத்தில் பனிப் படிவே இல்லாமல் போகும். அப்போது, பனியால் மூடப்பட்ட ஆர்ட்டிக் பெருங்கடல் `பளிச்'சென்று வெளிப்படும் என்பதால், இங்குள்ள மீன் வளம், எண்ணை, தாது வளங்களை அள்ளிச் செல்லவும், புதிய கடல் வழிகளைக் கண்டு பிடிக்கவும் மனிதர்கள் இங்கு படையெடுப்பார்கள். அது புதிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடும் என்ற கவலையும் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்படுகிறது.

No comments: