Thursday, March 29, 2012

புற்று நோயை கண்டுபிடிக்க நவீன ரத்தப் பரிசோதனை


மனிதர்களின் இயல்பு வாழ்க்கையில் இடியைத் தூக்கி போட்டு நிலைகுலையச் செய்துவிடும் புற்றுநோயை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இல்லையென்றால் அது வேர்விட்டு, கிளைவிட்டு பெரிய ஆல மரமாக விஸ்வரூபம் எடுத்துவிடும். அதன்பிறகு அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவதும், மீண்டு வருவதும் குதிரைக் கொம்புதான் என்கிறது அறிவியல்.
`புற்றுநோய் என்ன மரமா? அதெப்படி வேர்விட்டு, கிளைவிட்டு விஸ்வரூபம் எடுக்க முடியும்' என்று யோசிக்கிறீர்களா?
உண்மைதான், மண்ணில் விழும் ஒரு விதை போதிய நீரும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்போது வேர்விட்டு வளர்ந்து கிளைக்கத் தொடங்கும். அதுபோலவே உடலின் ஓர் உயிரணு அல்லது திசுவில் உருவாகும் புற்றுநோய் மெல்ல மெல்ல வளர்ந்து புற்று நோய் கட்டியாகி விடும். அதன்
பிறகு அந்தக் கட்டி உடைந்து அதிலிருந்து வெளியாகும் புற்றணுக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். இவற்றை சுழலும் புற்றணுக்கள் (Circulating Tumor Cells) என்கிறார்கள்.
புற்றுநோய் ஓர் உயிர்கொல்லி நோயாவதே இந்த சுழலும் புற்றணுக்களால்தான். அதாவது, ஒரு குறிப்பிட்ட உடல் பகுதியை பாதிக்கும் புற்றுநோய் சுழலும் புற்றணுக்கள் மூலமாக ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் பல்வேறு பகுதிகளையும் பாதிக்கிறது. இதனால் உடல் முழுவதும் நலிவுற்று மரணம் ஏற்படுகிறது. இந்த பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே புற்றுநோய் மருத்துவத்தின் தலையாய நோக்கமாக இருக்கிறது.
இதற்கு சுலபமான வழி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் ஆய்வு மைய ஆய்வாளர்கள்.
ரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் சுழலும் புற்றணுக்களை கண்டறிந்து, அவற்றை மேலும் விரிவாக ஆய்வு செய்ய உதவும் அதி நவீன ரத்த பரிசோதனைதான் அந்த சுலபமான வழி.
HDCTC அல்லது ஹை டெபனிஷன் சிடிசி என்றழைக்கப்படும் இந்த ரத்த பரிசோதனையின் மூலம் புற்றுநோயை கண்காணிப்பது, அதன் வளர்ச்சி மற்றும் பரவுதலை புரிந்துகொள்வது போன்ற பல நன்மைகள் உண்டு என்கிறார் மூத்த ஆய்வாளர் பீட்டர் குன்.
முக்கியமாக, இதுவரை அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அறிந்துகொள்ளக்கூடிய புற்றுநோயின் பல இயல்புகளை, சுலபமான இந்த ரத்தப்பரிசோதனை அம்பலப் படுத்தி விடுகிறது. ஆமாம், அப்படி என்னதான் செய்கிறது இந்த பிஞிசிஜிசி ரத்த பரிசோதனை?
HDCTC, ஒரு புற்றுநோயாளியின் ரத்தத்தில் கலந்திருக்கும் சுழலும் புற்றணுக்கள் ரத்தத்தின் சிவப்பு மற்றும் வெள்ளை உயிரணுக்களிலிருந்து வேறுபட்டு தெரியும் வண்ணம் முதலில் அடையாளம் செய்யப்படுகின்றன. பின்னர், அடையாளம் கண்டறியப்பட்ட சுழலும் புற்றணுக்கள் ஒரு டிஜிட்டல் மைக்ராஸ்கோப் மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றன. சுழலும் புற்றணுக்கள் ஆரோக்கியமான உயிரணுக்களைப் போல் அல்லாமல் வடிவம் மற்றும் அளவில் மாறுபட்டிருக்கும். இதன் அடிப்படையிலேயே சுழலும் புற்றணுக்களை டிஜிட்டல் மைக்ராஸ்கோப் பிரித்தெடுக்கிறது.
இந்த புதிய பரிசோதனை முறை சரியானதுதானா என்பதை தீர்மானிக்க ஆய்வாளர் பீட்டர் குன்னுடைய ஆய்வுக்குழு, அமெரிக்காவின் வேறு நான்கு ஆய்வுக்குழு மற்றும் ஒரு நெதர்லாந்து நாட்டு ஆய்வுக்குழு என மொத்தம் ஐந்து ஆய்வுக்
குழுக்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில்,HDCTC மிகவும் துல்லியமானது மற்றும் பல வகையான புற்றுநோய்களை கண்டறியும் திறனுள்ள ஒரு பரிசோதனை என்பது ஊர்ஜிதமானது.
சுழலும் புற்றணுக்களை கண்டறிய உதவும் இதுவரையிலான பல பரிசோதனை முறைகள் சில வகையான சுழலும் புற்றணுக்களை ஒதுக்கி விடுகின்றன. ஆனால், HDCTCயானது ஒரு சுழலும் புற்றணுவைக்கூட தவற
விடாமல் அனைத்தையும் துல்லியமாக கண்டறிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரித்தெடுக்கப்பட்ட சுழலும் புற்றணுக்களை ஹை டெபனிஷன் இமேஜ்களாக பார்க்க முடியும் என்பது இந்த பரிசோதனையின் குறிப்பிடத்தக்க விசேஷம்.
இந்த பரிசோதனையின் மூலம் புராஸ்டேட், நுரையீரல், கணையம் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் உள்ள பல நோயாளிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், பிஞிசிஜிசி பரிசோதனையைக் கொண்டு ஏற்கனவே கண்டறியப்பட்ட புற்றுநோயைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிவதோடு மட்டுமல்லாமல், ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்றறியும் தொடக்கநிலை பரிசோதனையையும் செய்துகொள்ளலாம் என்கிறார் ஆய்வாளர் பீட்டர் குன்.

No comments: