Thursday, March 29, 2012

விஷத்தைப் பற்றிய மக்கள் பார்வை!

பொதுவாக நமது மக்கள் விஷம் என்றால் என்னவென்று நினைக்கிறார்கள், அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை அவசியம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நமது மக்கள் பார்வையில் மனிதனைக் கொன்றால்தான் விஷம். இல்லாவிட்டால் அது உண்ணக்கூடியதுதான். அது மனிதனைக் கொல்லாமல் உடம்பினுள் என்னசெய்யும் என்னென்ன பின்விளைவுகளை உண்டாக்கும் என்பதெல்லாம் முக்கியமே அல்ல. அதை ஒட்டித்தான் நம் மக்கள் உடனடியாகக் கொல்லாத மெல்லக் கொல்லும் விஷத்தை உண்டு வாழ்ந்துகொண்டுள்ளார்கள்.

உதாரணத்துக்கு ஒன்று 
இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் சுண்டக்கடலை சாகுபடி செய்வதற்காக ஒன்றிய வேளாண்மை அலுவலகத்திலிருந்து விவசாயிகளுக்கு இலவசமாக ஐந்துகிலோ வீதம் கடலை விதை கொடுத்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் வாங்கிய ஒரு விவசாயிகூட கடலை சாகுபடி செய்யவில்லை!
அப்புறம் ஏன் விதையை வாங்கினார்கள்? இலவசமாகக் கிடைத்ததால்! வாங்கி என்னசெய்தார்கள்? ஒரு பகுதியினர் கடைக்காரரிடம் அவர் கொடுத்த காசுக்கு விற்றார்கள். (அதுகூட நமது நடைமுறை வாழ்வியல் கோட்பாட்டின்படி தவறு அல்ல. ஏனென்றால் இவர்கள் அப்படிச் செய்யாவிட்டாலும் அதிகாரிகள் அப்படித்தான் செய்யப் போகிறார்கள்) 
ஆனால் பெரும்பாலோர் செய்ததுதான் பயங்கரம்! ஆதாவது விஷம் கலந்தது என்று அச்சிடப்பட்ட பைகளில் வாங்கிப் போன அந்த விதைக் கடலையைத் தின்றே தீர்த்தார்கள்! அந்த விஷம் உடனடியாகக் கொல்லக்கூடியதாக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கானோர் மடிந்திருப்பார்கள். அப்படியொரு அரிய வாய்ப்புக்காக இப்போதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்!
அவர்களுடைய அறிவும் வாதமும் என்னவென்றால் அந்தக் கடலையில் கலக்கப்பட்டிருக்கிற கொடிய விஷத்தைச் சுத்தமாகக் கழுவிச்சாப்பட்டால் ஒன்றும் செய்யாது என்பதே. இந்தக் கடலையை வாங்கிச் சென்ற விவசாயிகளில் எத்தனைபேர் சாகுபடி செய்தார்கள் என்று இப்போது கணக்கெடுத்தாலும் எங்கள் பகுதியில் ஒரு நபர்கூட இல்லை என்பது தெரியவரும். அதன்விளைவாக முறைகேடாக விற்ற அதிகாரிகள், அதை முறைகேடாக வாங்கி விற்று லாபம்பார்த்த கடைக்காரர்கள் உயிரைப்பணயம் வைத்து அதைத்தின்று தீர்த்த அத்தனைபேரும் குற்றவாளிகள் ஆகவேண்டிவரும்.
இது ஒரு சாம்பிள்தானே? இதுமாதிரி ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருமாதிரி நடக்கத்தானே செய்கிறது? மக்காச் சோளம் குறைந்த விலைக்கு வாங்கி இருப்புவைத்து லாபத்துக்கு விற்பவர்கள் கெடாமல் இருக்க அதற்கு நுவாக்ரான் என்ற கொடிய விஷத்தை ஸ்பிரே செய்து பின் மூட்டை கட்டிப்போட்டு விற்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்pறேன்.
நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவுப்பொருட்கள் தரமற்றவை எனக் கப்பல்களில் திருப்பி அனுப்பப்படுவதைப் படித்திருக்கிறோம். ஆனால் நமது நாட்டு மக்களை அனைத்து உணவுப்பொருட்களிலும் கலந்திருக்கிற, கலக்கப்படுகிற விஷத்திலிருந்து யார் காப்பற்றுவது? அத்தகைய பொறுப்பு யாருக்கு இருக்கிறது? குற்றவாளிகளால் ஆளப்படும் நாட்டில் பிறந்த நாம் இதுமாதிரி நிலைமைகளை எத்தனைநாள் சகிக்கப் போகிறோம்?

No comments: