Saturday, March 17, 2012

பழைய சோறு

பழைய சோறு
============

வெய்யில் காலம் துவங்கிவிட்டது. இனி ஆளுக்கு ஆள் பேச்சுத் துவங்குவதே வெய்pலைப்பற்றித்தான் இருக்கும்.

மின்சாரமும் பழிவாங்குவதால் இந்தக் கோடை ஒரு சோதனையான காலமாகத்தான் இருக்கப்போகிறது.

இந்த நேரத்தில் வழக்கொழிந்து வருகிற பழையசோற்றின் சிறப்புப் பற்றிச் சொல்லப் போகிறேன்.

அரிசி, கம்பு, சோளம், தினை, சாமை, ராகி போன்ற தானியங்களால் சமைக்கப்படும் சோற்றைக் கொண்டோ களியைக் கொண்டோ பழைய சோறு தயாரிக்கலாம்.

குறிப்பாக அரிசியும் கம்பும் சோளமும் எளிதில் கிடைக்கக்கூடியவை.

பழைய சோறு என்பது அதற்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கபடுவது அல்ல. சூடாக உண்பதற்காகத் தயாரிக்கப்படும் சாதம் அல்லது களியை உண்டுவிட்டு மீதம் இருப்பது ஆறியபின்பு அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டால் சுமார் ஆறுமணிநேரத்துக்குப் பின்னால் பழைய சோறு தயார். அதை மேலும் ஒரு நாள் வரை வைத்திருந்து போதுமான அளவு சோறும் அதிலுள்ள நீரும் சிறிது உப்பும் சேர்த்து பழைய சோற்றுக்கலவையை உண்பதற்குத் தயார் செய்துவிடலாம்.

பொதுவாகப் பழைய சோற்றைக் கையால் பிசைந்து கரைத்தால்தான் நன்கு கூழ்பாகத்தில் உண்பதற்கு நன்கு இருக்கும். கரண்டியால் கலக்கினால் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் பருக்கை பருக்கையாக இருக்கும்.

சமைப்பது மண் சட்டியாக இல்லாமல் வேறு பாத்திரமாக இருந்தாலும் அதைப் பழைய சோற்றுக்காக எடுத்துவைக்கும்போது மண் சட்டியில் வைத்துத் தண்ணீர் ஊற்றிவைப்பதுதான் சிறந்தது. காரணம் அது கூடுதல் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். மண் சட்டி இல்லாவிட்டால் மற்ற பாத்திரங்களிலும் வைக்கலாம்.

பழைய சோற்றில் மோரோ தயிரோ கலந்துகொள்வது மேலும் சுவையை அதிகப்படுத்தும். அதனுடன் சின்னவெங்காயத்தை சின்னதாக நறுக்கிப் போட்டோ அல்லது நேரடியாய்க் கடித்துக்கொண்டோ பழைய சோறு சாப்பட்டால் இன்னும் சுவை கூடுதல் ஆகும். முன்பெல்லாம் பச்சைமிளகாயைக் கடித்துக் கொண்டும் பழைய சோறு உண்பார்கள்.

பழைய சோறு தண்ணீர் ஊற்றிவைத்த ஆறில் இருந்து பன்னிரண்டு மணிநேரத்துக்குப் பின்னால் அதை முறைப்படி உப்பும் இருந்தால் மோரோ தயிரோ கலந்து கலக்கிக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்துப் போதுமான நேரத்துக்குப்பின்னால் சாப்பிட்டால் அதன்சுவையை வர்ணிக்கவே முடியாது.

இது அந்தக்காலத்தில் ஏழை மக்களின் மலிவான உணவாகும்.

சமைத்த உணவைவிட இது கூடுதல் சத்துக்களைக் கொண்டது. எளிதில் செரிக்கக்கூடியது. இயற்கை உணவுக்கு நிகரானது.

அந்தக் காலத்தில் கடுமையாக உழைக்கும் ஏழைகளும் உழைப்பாளிகளும் விவசாயிகளும் பழைய சோறுதான் சாப்பிட்டு வாழ்ந்தார்கள் என்றால் அதன் சிறப்பை நன்கு உணரலாம்!

அந்தக் காலத்தில் காலை உணவு உண்ணும் நேரத்தைப் பழைய சோத்து நேரம் என்றுதான் கிராமங்களில் சொல்வார்கள்.

பழைய சோற்று வகைகளிலேயே கம்புதான் மிகுந்த மணத்துடனும் சுவையுடனும் முதலிடம் வகிக்கிறது. அதனால்தான் கம்மங்கூழ் பானைகளில் வைத்து தெருவோரங்களில் கூட விற்றபனை செய்யப்படுகிறது.

பழைய சோற்றில் உள்ள சிறப்புகளைத் தனிக் கட்டுரையில் விளக்குவதுதூன் சிறப்பாக இருக்கும். அது ஒருவகையில் மருத்துவகுணமும் இயற்கைத் தன்மையும் கொண்டதாக இருப்பதால் சமைக்கப்படும் எந்த ஒரு உயர்ந்த வகை உணவை விடவும் ஒப்பு நோக்கில் உடல் நலனுக்கு ஏற்றதும் மிகவும் செலவு குறைந்ததும் ஆகும்.

மற்ற உணவை உண்டால் தாகம் எடுக்கும். ஆனால் பழைய சோறு உண்டால் தாகத்தைப் போக்கும்.

பழைய சோற்றை மறக்கவேண்டாமே!

No comments: