Tuesday, February 28, 2012

இரணகள்ளி.

இரணகள்ளி.




இரணகள்ளி.


இரணகள்ளி.

மூலிகையின் பெயர் –: இரணகள்ளி.

தாவாரப்பெயர் –: EUPHORBIA.

தாவரக்குடும்பம் :– EUPHORBIACEAE.

பயன்தரும் பாகங்கள் –: பால் மற்றும் இலை.

வளரியல்பு –: கள்ளி இனங்ளில் 2008 வகைகள் உள்ளன.. கால்நடைகள் சாதாரணமாக இதைக் கடித்துச் சாப்பிடுவதில்லை. கள்ளிகள் பலவிதமான தோற்றங்கள், சிறு செடிமுதல் மரம் வரை வளரக்கூடியவை. பல வண்ண மலர்களுடன் காணப்படும். அழகுக்காக எல்லா நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதன் தோற்றம் சங்க காலத்திலும், ஜீலிசீசர் காலத்திலும் இருந்துள்ளது. அதனால் காலம் நிர்ணியிக்க முடியவில்லை.

கள்ளி இனங்களில் இந்த இரணகள்ளி செடியாக வளரும் இனம். இதன் இலைகள் ஆலமரத்து இலை போன்று, ஆனால் சற்று தடிப்பாக இருக்கும். இலையைக் கிள்ளி ஈரமான இடத்தில் போட்டால் அங்கும் செடி உண்டாகும். இது வரண்ட சமவெளிகளிலும் மலைகளிலும் தன்னிச்சையாக வளரக்கூடியது. தண்ணீரோ மழையோ தேவையில்லை.. காற்றிலுள்ள நீரைக் குடித்தே இது செழிப்பாக வளரும். இதன் இலை உடம்பில் பட்டால் சிவந்து தடித்து விடும். இரணகள்ளி இலை மூலமும், விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.

மருத்துவப்பயன்கள் –: இரணகள்ளி- பொதுவாக நீர் மலம் போக்கும், வாந்தி உண்டாக்கும், தடிப்புணாட்டாக்கும் செய்கையுடையது. கள்ளி இனங்களான கொம்புக்கள்ளி, கொடிக்கள்ளி, சதுரக்கள்ளி, திருகுக் கள்ளி என்ற கள்ளியின்னங்களுக்கு என்ன செய்கை உண்டோ, அதே செய்கை இதற்கும் உண்டு. ஆனால் இந்த ரணக்கள்ளி செடியில் பால் இராது.

இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றில் இரு துளி வென்னீரில் கலந்து உள்ளுக்குக் கொடுத்த பின்னர், தேள் கொட்டின கடிவாயில் மேல்படி இலையை அரைத்து வைத்துக் கட்டி விட தேள்கடி நஞ்சு இறங்கப் போகும்.

இரணக்கள்ளி இலைக்கு இரணத்தை ஆற்றும் சக்தியுண்டு. இந்த இலையை மை போல் அரைத்து, அறாத இரணத்தின் மேல் வைத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால், நாளவட்டத்தில் படிப்படியாக இரணம் ஆறும்.

இரணகள்ளிச் சாற்றை மரு, பாலுண்ணி, கால் ஆணி, சொற சொறப்பான மருக்கள் பேரில்  இரவில் தடவி வைத்துக் காலையில் கழுவி விடவேண்டும். இந்த விதமாக தினசரி, பாலுண்ணி, மரு மறையும் வரைத் தடவி வர வேண்டும்.

மூன்று இரணகள்ளி இலையை அம்மியில் வைத்து அரைத்து, ஒரு புதிய சட்டியில் போட்டு தேக்கரண்டியளவு மிளகு, அரைத் தேக்கரண்டியளவு சீரகம் இவைகளையும் அரைத்துப் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி,  காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் கபவாத சம்பந்தமான நோய்கள் சன்னி ரோகம், நரம்புச் சிலந்தி, நளிர் வாத நோய்கள் ஆகியவை குணமாகும்.

இரணக் கள்ளி செடியைக் கொண்டு வந்து வீட்டில் உயரத்தில் கட்டி வைக்க கொசுக்கள் இதன் வாடையால் வீட்டில் தங்காமல் ஓடிவிடும்.
 
இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அரைக் கிலோ பசு வெண்ணையுடன் 500 மில்லி சாறு சேர்த்து நெய் காய்ச்சி எடுதுக்கொண்டு, அந்த நெய்யை பிரண்டைத் துவையல் சோற்றுடன் கலந்து அதில் மேல்படி நெய்யை உருக்கி ஊற்றிப் பிசைந்து பகல் உணவில் மட்டும் சாப்பிட்டுவர குன்ம நோய், அசீரணம், வயிற்றில் ரணம், வாயுத்தொல்லை, மற்றும் சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல் ஆகியவைகளில் காணும் எல்லாவித புண், ரணம், அழிற்சி யாவும் ஆறிப்போகும். அறுவை சிகிச்சை செய்து தான் தீரவேண்டும் என்ற நோய்களும் மேல் கண்ட முறையால் அறுவை சிகிச்சையின்றி குணமாக்கிக் கொள்ளலாம். பத்தியம்; சுட்ட புளி, வறுத்த உப்பு சேர்த்துக் கொண்டு இதர பொருட்களை நீக்கி இச்சா பத்தியமாக இருப்பது அவசியம்.

இரணக் கள்ளி செடியின் சமூலத்தை எடுத்து இடித்து சாறு 500 மில்லி, தேங்காய் எண்ணை 400 மில்லி, அதனுடன் கஸ்தூரி மஞ்சள் 10 கிராம், நீரடிமுத்து 20 கிராம், கார்போக அரிசி 30 கிராம், கப்பு மஞ்சள் 40 கிராம், கசகசா 5 கிராம், சேர்த்து இடித்து யாவும் ஒன்றாக கலந்து அடுப்பில் சிறு தீயாக கொதிக்க வைத்து சாறு சுண்டிய பின்னர் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலையில் எழுந்து சர்மநோய் உடையவர் தலை முதல் கால் வரை மேலுக்குப் பூசி அரைமணி நேரம் ஊரவைத்துப் பின்னர் இளஞ்சூடான நீரில் சீயக்காய்த் தூள் போட்டுக் குளித்துவர குட்டம், மேகநீர், ஊரல் படை, கருமேகநீர், சம்பந்தமான சர்ம நோய், செம்மேகப்படை, கிரந்தி நோய்கள் யாவும் போகும்.


No comments: