Saturday, February 18, 2012

எலி பிடித்துத் தின்னும் தாவரம்

எலி பிடித்துத் தின்னும் தாவரம்

சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் குடுவை போன்றதொரு புலால் உண்ணும் தாவரம் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர். இது பூச்சிகள் மட்டுமல்லாது எலிகளையும் பிடித்து உண்பதாக அறிவித்துள்ளனர்.


ஆங்கிலேய நாட்டுத் தாவரவியல் நிபுணர்களான ஸடீவர்ட் மெக்ஃபெர்ஸன், அலைஸ்டர் இராபின்ஸன் (Stewart McPherson and Alastair Robinson) ஆகிய இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டின் விக்டோரியா மலைகளில் இதைக் கண்டு பிடித்து இதற்கு வன உயிரிகளைப் பற்றிய பரப்புரையாளர் சர். டேவிட் அட்டன்பரோ அவர்களது பெயரைக் கொண்டு நெபன்த்தெஸ் அட்டன்பரோயீ (Nepenthes attenboroughii) எனப் பெயரிட்டுள்ளனர். மேலேயுள்ள அத்தாவரத்தின் படம் ஸடீவர்ட் மெக்ஃபெர்ஸன் அவர்களால் பிடிக்கப்பட்டது.

புலால் உண்ணும் (Pitcher Plant) குடுவை வடிவ தாவரங்களில் இதுவே பெரியது என்றும் இதிலிருந்து வெளிவரும் அமிலம் போன்றதொரு வேதிப்பொருள் எலிகளையும் செரித்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு கிறிஸ்துவ மிஷனரிகள் விக்டோரிய மலையில் 2000ம் ஆண்டில் ஏறிய போது இது போன்றதொரு தாவரத்தைக் கண்டதாக எழுந்த பேச்சுதான் அவர்கள் இத்தாவரத்தைத் தேடத் தூண்டுகோலாக அமைந்ததாம்.

ஸ்டீவர்ட் மெக்ஃபெர்ஸன் இதைப்பற்றிக் கூறும்போது "இத்தாவரம் கண்ணைக் கவரும் வகையிலான பொறிகளை அமைத்து பூச்சிகளை மட்டுமில்லாது எலிகளையும் பிடித்து விடுகின்றன. இந்த அதிசயத் தாவரம் 21ம் நூற்றாண்டு வரை கண்டு பிடிக்கப்படாமல் இருந்ததுதான் ஆச்சரியமளிக்கிறது" என்கின்றார்.


இயற்கை உலகின் வனப்பையும் அதன் பரந்துபட்ட தன்மையையும் நன்முறையில் அறிந்து கொள்ள பற்பல தலைமுறையினருக்குத் தூண்டுகோலாய் அமைந்துள்ள சர்.டேவிட் அவர்களுடைய பணிகளுக்கு மரியாதை தரும் விதத்தில் எங்கள் குழுவும் நானும் இத்தாவரத்துக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளோம் என்கிறார் ஸ்டீவர்ட் மெக்ஃபெர்ஸன்.
இந்தக் கண்டு பிடிப்புக்கு தன் பெயரை இட அனுமதி கேட்ட போதே, அதற்காக தன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார் சர்.டேவிட் (வயது 83, படம்)

இந்தக் குழு, 2007ல் தம் இரண்டு மாத முயற்சியில் கண்டறிந்த இத்தாவரத்தைப் பற்றியும், இது போன்ற புலால் உண்ணும் குடுவை வடிவ தாவரங்களின் 120 வகைகளைப் பற்றியும் மூன்று ஆண்டுகள் ஆய்வுகள் செய்த பின், இந்த வருட தொடக்கத்தில் Botanical Journal of Linnean Societyல் வெளியிட்டுள்ளது.

இதை இந்தியாவுக்குக் கொண்டு வந்து, நம் விவசாயிகளின் விளைநிலங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டை வளர்த்து வந்தால், எலிகளால் நம் விவசாயத் தொழிலுக்கும் நம் நாட்டுக்கும் ஏற்படும் மிகப்பெரிய இழப்புகளைத் தவிர்க்கலாம். நம் தாவரவியல் விஞ்ஞானிகளின் கண்களில் பட வேண்டும். மிக எளிய வழியாகத் தெரிகிறது.

No comments: