Tuesday, June 12, 2012

காது குத்துதல்

 

இந்து மத சம்பிரதாயங்களில் காது குத்துதல் ஒரு முக்கிய சடங்காகும். குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் இந்த சடங்கை முடிக்கவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் இரண்டு வருடம் தாள்ளிப்போட வேண்டும். ஆகவே பெரும்பாலான குடும்பங்களில் இந்த விழாவை ஒரு வருடத்திற்குள் முடித்து விடுவார்கள். பொதுவாக அவரவர்கள் குல தெய்வக் கோயிலில்தான் இந்த வைபவம் நடக்கும். முதலில் குழந்தைக்கு மொட்டை போடவேண்டும். குழந்தையை தாய் மாமன் மடியில் வைத்துக்கொள்ள, தலை ஆடாமல் இருக்க ஒரு நாலு பேர் பிடித்துக்கொள்வார்கள். குழந்தைக்கு இந்த அனுபவம் புதிதாகையால் முடிந்த மட்டும் அழும். இந்த அழுகையைப் பொருட்படுத்தாமல் நாவிதர் கருமமே கண்ணாக தன் வேலையை முடிப்பார். இந்தக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். அடுத்தது குழந்தையைக் குளிப்பாட்டுவார்கள். குளிப்பாட்டும்பொது சாதாரணமாகவே குழந்தைகள் அழுவார்கள். அதுவும் பலர் வேடிக்கை பார்க்க, புது இடத்தில் குளிப்பாட்டும்போது கேட்கவே வேண்டாம். அப்புறம் காது குத்துதல். இப்பொதும் குழந்தையை நாலு பேர் பிடித்துக்கொள்ள, ஆசாரியார் காது குத்தி தளுக்கனைப் போட்டு விடுவார். இப்போதும் குழந்தை அழும்.

இந்தக் கூத்தெல்லாம் முடிந்த பிறகு குழந்தையைப் பார்க்க சகிக்காது. முகமெல்லாம் சிவந்து வீங்கி அலங்கோலமாக இருக்கும். நான்கு நாள் போனால் இதே குழந்தை தன் தளுக்கைப் பார்த்து சந்தோஷப்படும். அது வேறு கதை.

No comments: