Thursday, June 14, 2012

மானம் காக்கும் தாவரம்!

மானம் காக்கும் தாவரம்!

மனிதன் தனது சொந்த முயற்சி காரணமாக முன்னேறினான், தொடர்ந்து முன்னேறி வருகிறான். அவன் தனது அறிவுத் திறன் காரணமாக பல அதிசயக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினான். இவ்வாறு அவன் நாகரீக ஏணியில் ஏறினான். இந்த உண்மைகள் ஒருபுறம் இருக்க, மனிதனுக்கு ஆடைகளை வழங்கி அவனை உண்மையான நாகரீக மனிதனாக்கிய பெருமை பருத்திச் செடிக்குத்தான் உரியது. பருத்தியில் இருந்து நூல் நூற்ற மனிதன், ஆடைகளை நெசவு செய்து கொண்டான்.
குகை மனிதன் விலங்குகளைப் போலவே திரிந்துவந்தான். அவன் தனது மானத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக தழைகளையும், மரப் பட்டைகளையும் ஆடைகளாக உபயோகித்தான். எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் பருத்தியின் உபயோகத்தை மனிதன் தெரிந்துகொண்டான்.
18-வது நூற்றாண்டு வரையில் பட்டு நூலைப் போலவும், கம்பளியைப் போலவும், பருத்தி நூல் நெசவும் கையாலேயே நடந்தது. பெரும்பாலான வெப்ப நாடுகளில் பருத்திச் செடிகளைக் காணலாம். பருத்திக் காய் நன்கு முற்றி, நெத்தாகி வெடித்ததும் பருத்தி வெளிப்படுகிறது. பருத்தி, விலங்குகளின் ரோமங்களில் இருந்து நூல் நூற்பதற்கு மனிதன் எவ்வாறு கற்றுக் கொண்டான்?
கற்காலத்து மனிதன் கூடைகளை முடையவும், கயிறுகளைத் தயாரிப்பதற்கும் நாணல், கோரை, தோல் துண்டுகள் ஆகியவற்றை முறுக்கத் தெரிந்துகொண்டான். அதன் பின்னர் பருத்தியிலிருந்தும் நூல் நூற்கலாம் என்ற சிந்தனை அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சணல் நூற்பு வழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
பருத்தியில் இருந்து நூல் நூற்பதற்கு இந்தியாவே வழிகாட்டியது. கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே பருத்தியையும், பருத்தி நூலில் நெசவு செய்யப்பட்ட ஆடைகளையும் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்திருக்கிறது இந்தியா.
பருத்தி என்றால் என்ன என்பது பற்றியும், அதிலிருந்து நூல் நூற்று ஆடைகள் தயாரிக்க முடியும் என்பதையும் இந்தியர்கள் அறிந்துகொண்டிருந்தனர்.
ஐரோப்பா நாகரீக வாசத்தை உணராத காலத்திலேயே இந்தியா நாகரீகத்தில் தலைசிறந்த நாடாக விளங்கியது. இங்கு சாதாரணமாக நடைபெற்று வந்த பருத்தி நூல் நூற்பும், நெசவும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பண்டைய இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் கை ராட்டையாலும், கையாலும் நூல் நூற்று வந்தனர்.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பிரிட்டீஷ்காரர்கள் பருத்தியின் உபயோகத்தைத் தெரிந்துகொண்டார்கள். லங்காஷயரிலும், மான்செஸ்டரிலும் ஆலைகள் உற்பத்தி செய்த துணிகளை இந்தியா மீது திணிப்பதற்கும், இந்தி யாவின் புராதன நெசவுத் தொழிலை அழிப்பதற்கும் ஆங்கிலேயர்கள் தமது ஆதிக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு புரிந்த கொடுமைகள் கணக்கில் அடங்காது.
டாக்கா மஸ்லின் துணியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கைக்குள் அடங்கக்கூடிய மஸ்லின் துணியை டாக்கா நெசவாளர்கள் தமது நுட்பமான கைத்திறனால் உற்பத்தி செய்தனர். பொறாமை காரணமாக அந்த நெசவாளர்களின் கட்டை விரல்களை வெள்ளையர்கள் துண்டித்தனர்.
வெள்ளையர்கள் செய்த கொடுமைகளே தேசபக்தக் கனலாக மாறி ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் எரிய ஆரம்பித்தது. அந்தக் கனலை மகாத்மா காந்தி விசிறி விட்டார்.
அவரது சத்தியாகிரகப் போராட்டத்தில் அன்னியத் துணி எரிப்பு, நிராகரிப்பு, கை ராட்டையிலும், தக்ளியிலும் நூல் நூற்பு ஆகியவை முக்கிய இடம் பெற்றன.
காந்தியடிகள் ஆரம்பித்த கதர் இயக்கம் வெறும் நூலையும், துணியையும் மட்டும் சார்ந்திருக்கவில்லை. அந்த இயக்கம் பொருளாதார முனையில் பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான ஆயுதமாகத் திகழ்ந்தது. பருத்தியையும், பருத்தி நூலையும் பற்றிக் கூறும் வரலாற்றில் மகாத்மா காந்திக்கு முக்கிய இடம் உண்டு.

No comments: