Wednesday, June 27, 2012

குகை வீடுகளில் வசிக்கும் மக்கள்!

குகை வீடுகளில் வசிக்கும் மக்கள்!

சீனா, பழமையும், புதுமையும் கலந்த ஒரு இரும்புத் திரை நாடு. கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் மட்டுமல்லாமல், பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பெரு நகரங்களில் கூட, புராதன காலத்து வீடுகள் அதிகம் இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டி, பீஜிங் நகரத்தின் அடையாளத்தையே அடியோடு மாற்றி விட்டது.
"ஒலிம்பிக் போட்டிக்காக, <உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர், பீஜிங்கிற்கு வரும்போது, அங்குள்ள பழமையான வீடுகளை பார்த்து, நம் நாட்டை குறைவாக மதிப்பிட்டு விடுவர்...' என, சீன அரசு கருதியது. இதன் காரணமாக, பழமையை பறைசாற்றிக் கொண்டிருந்த, லட்சக்கணக்கான வீடுகள், இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. பீஜிங் உள்ளிட்ட சீனாவின் பெரு நகரங்களிலும், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளிலும் இருந்த பழமையான வீடுகள், இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.
ஆனாலும், இங்குள்ள ஷான்சி மாகாணத்தில், மிகப் பழமையான குகை வீடுகள் அதிக அளவில் உள்ளன என்பதும், இந்த வீடுகளில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னும் வசிக்கின்றனர் என்பது தான் ஆச்சரியமான விஷயம். இந்த வீடுகள், மலைகளை குடைந்து உருவாக்கப்பட்டவை.
இந்த பகுதியில் உள்ள மலைகள், மண் துகள்களால் ஆனவை. பல ஆண்டுகளுக்கு முன், இங்கு வசித்தவர்கள், இந்த குகை வீடுகளை அமைத்துள்ளனர். அரை வட்ட வடிவமான நுழைவாயில், தரை விரிப்புகளாலான கதவுகள், உயர்ந்த மேற்கூரை, சூரிய வெளிச்சம் உள்ளே வரும் வகையில் அமைக்கப்பட்ட ஜன்னல்கள் என, இயற்கையான அம்சங்களுடன் இந்த குகை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சற்று வசதியுள்ளவர்களின் குகை வீடுகளில், மின்சாரம், தொலைபேசி, குடிநீர் குழாய் ஆகிய வசதிகளும் உள்ளன. இந்த வீடுகளை கட்டுவதற்கு, சிமென்ட், செங்கல், தண்ணீர் உள்ளிட்ட எந்த பொருட்களும் தேவையில்லை என்பதால், செலவும் மிகவும் குறைவு. தற்போது இந்த குகை வீடுகளில், வயதானோர் மட்டுமே அதிக அளவில் வசிக்கின்றனர்.
சீனாவில் வேகமாக பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக, நகர்ப்புறங்களில் வசிப்பதற்கு, போதிய வீடுகள் கிடைப்பது இல்லை. இதனால், சமீபகாலமாக, பழமையான குகை வீடுகளுக்கு, கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இங்கு வசிப்பவர்கள், வீடுகளை விற்பதற்கு முன்வருவது இல்லை. "இந்த வீடுகள், எங்கள் வேர்களின் அடையாளமாக விளங்குகின்றன. எங்களின் முன்னோர், இங்கு தான் பிறந்து வளர்ந்தனர். இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அவர்களின் நினைவுகளுடன் வசிப்பது போல் உணர்கிறோம். எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும், வீட்டை விற்க மாட்டோம்...' என, உறுதியாக கூறுகின்றனர், இங்கு வசிக்கும் சீனர்கள்.
கிராமங்களில் முன்னோர்கள் வசித்த பழமையான வீடுகளை, "தொலையட்டும்' என, குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, நகர்ப்புறங்களில் போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும், "நம்மவர்'களுக்கு, இந்த சீன மக்களின் அசாத்தியமான மன உறுதி, நல்ல பாடம்.

No comments: