Saturday, June 9, 2012

செம்மறி ஆடு பராமரிப்பு முறைகள்

சரியான பராமரிப்புடன் சினை ஆடுகளை வளர்த்தால், ஈனும் குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அவற்றை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்க்க முடியும். அதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.


* குட்டி ஈனும் தருணத்தில் உள்ள சினை ஆடுகளை தனிக் கொட்டிலில் வைத்துக் கவனத்துடன் வளர்க்க வேண்டும்.
* சினை  ஆடுகளை ஊசி போடுதல், மருந்தளித்தல் என அடிக்கடி தொந்தரவு கொடுத்தல் கூடாது. முடிந்தவரை தடுப்பூசி மருந்துகளை ஓரிரு தடவைகளில் போட்டு முடித்துவிடுதல் நலம்.
* குட்டி ஈனுதற்கு 3-4 வாரங்கள் முன் அதிக அளவில் அடர்தீவனமும் அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால் குட்டி ஈன்றவுடன் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.
* சரியான தீவனம் அளிக்கப்படவில்லையெனில் கரு கலைதல், குட்டி இறந்து பிறத்தல், ரத்தத்தில்  விஷத்தன்மை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
* ஈன்ற குட்டிகளை 4-6 நாளில் தாயிடமிருந்து பிரித்துக் குட்டிகளின் கொட்டிலில் வளர்க்க வேண்டும். முடிந்தவரை குட்டிகளுக்கு மென்மையான தரை அமைப்பு கொண்ட தனித்தனி கொட்டில் அமைத்தல் நலம்.
* குட்டி ஈன்ற ஆடுகளின் பால் தரும் காலத்தைக் கவனித்துக் குறித்து வைத்தல் நலம். பொதுவாக 142-150 நாட்கள் வரை இருக்கும். இதைவிடக் குறைவாக இருந்தால் பால் தரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
* குட்டிகளை குளிர், பனி, மழை, வெயிலிலிருந்து முறையாகப் பாதுகாக்க வேண்டும்.
 குட்டி ஈனும்போது கவனிக்க வேண்டியவை:
* குட்டி ஈனும் தருணத்தில் ஆடானது மந்தையிலிருந்து பிரிந்துவிடும்.
* ஆடு அமைதியற்று, மடி பெருத்து, பெண் இனப்பெருக்க உறுப்புகள் சிவந்த வண்ணம் காணப்படும்.
* பொதுவாக ஆரோக்கியமான ஆடுகளில் குட்டி ஈனுதல் தானாகவே நடக்கும் எனினும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுப்பது நன்மையாகும்.
குட்டிகளைப் பிரித்துப் பாதுகாத்தல்:
* 90 நாட்களில் குட்டியைத் தாயிடமிருந்து பிரித்துவிட வேண்டும். பால் உற்பத்தி தாய் ஆட்டிடம் குறைவாக இருக்கும் பட்சத்தில் 60 நாட்களிலேயே பிரித்துவிடுதல் நலம்.
 * தாய்ப்பாலுக்குப் பதில் வேறு கலப்புத் தீவனங்கள் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் அளித்தல் அவசியம்.
* முள், குழி, அதிகக் கற்கள் கொண்ட பகுதிகளில் குட்டிகளை மேயவிடுதல் கூடாது. ஏனெனில் அவற்றுக்குக் கண் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் ரோமம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
இந்திய விவசாயிகள் ஆடுமாடு வளர்ப்பதென்பது அவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரம். ஏறத்தாழ எட்டு கோடி விவசாயப் பெண்கள் ஓரிரு மாடுகளை வைத்துப் பால் உற்பத்தியில் ஈடுபட்டுத் தமது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். கிராமப்புறங்களிலுள்ள 70 சதவீத கால்நடைகள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளிடமும் நடுத்தர விவசாயிகளிடமும்தான் உள்ளது. கால்நடை சார்ந்த பொருட்கள் இக்கிராமப்புற விவசாயிகளின் ஆண்டு வருமானத்தில் 20 முதல் 70 சதவீதம் வரை பங்களிக்கிறது. இயற்கை பொய்த்துப் போகும்போதும் விவசாய விளைபொருட்களின் விலை சந்தையில் வீழ்ச்சியடையும்போதும் விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுத்து காப்பவை இக்கால்நடைகள்தான். கிராமப்புறங்களில் அவசரத் தேவைக்கான வங்கிகளாக இருப்பவை இக்கால்நடைச்  செல்வங்கள்தான்.

No comments: