Saturday, July 28, 2012

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம்

கயிலாயத்தில் ஒருமுறை சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் போது உமாதேவி தான் வெற்றி பெற்றதாகக் கூற சிவன் மறுத்தார்.
இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.
இறுதியில் கணதேவனான சித்திரநேமியை அழைத்துப் பார்க்கச் சொல்ல, அவனோ சிவனே வெற்றி பெற்றார் என்று சொல்லிவிட்டான்.
கோபம் கொண்ட பார்வதி, “நீ பொய் கூறியதால், பெருவியாதியுடன் பூலோகத்தில் வாழ்வாயாக’ என சித்திரநேமியை சபித்தாள்.
அதிர்ந்த சிவபெருமான் தன்னால்தானே சித்திரநேமிக்கு இந்த நிலை ஏற்பட்டதை உணர்ந்து, அதற்குரிய சாப விமோசனத்தை பார்வதியே கூறவேண்டும் என்று பணித்தார்.
பார்வதியும், “பூலோகத்தில் புண்ணிய நதிக்கரையில் தேவலோகத்து கன்னிப் பெண்கள் புண்ணியமான ஒரு விரதத்தை அனுஷ்டிப்பார்கள். அந்த விரதத்தின்போது நடத்தப்படும் ஹோமத்தின் புகை உன்மீது பட்டால், உன் நோய் நீங்கும்’ என்றாள் சித்திரநேமியிடம்.
சாபத்தின்படி சித்திரநேமி நோயால் பீடிக்கப்பட்டு பூலோகம் வந்து புண்ணிய நதிக்கரையில் வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் தேவமங்கையர்கள் நதிக்கரைக்கு வந்து பூஜை செய்வதைப் பார்த்து அவர்களிடம் விரதம் பற்றி விளக்கம் கேட்டார்.
சிரவண மாதத்தில் சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிக்கப்பட வேண்டிய அந்த விரதத்தைப் பற்றி கூறினர். மகாலட்சுமிக்குரிய அந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் கிட்டும் நன்மைகளையும் சொல்லினர்.
அனைத்தையும் கேட்ட சித்திரநேமி அவர்களோடு சேர்ந்து தானும் விரதம் இருந்தான். அப்போது நடத்தப்பட்டஹோமத்தின் புகை பட்டதில், சித்திரநேமியின் நோய் அகன்றது. தொடர்ந்து அதே பூஜை செய்து ஐந்து வித தர்மங்களைச் செய்த சித்திரநேமி, எல்லா சௌபாக்யங்களுடனும் கயிலாயம் சென்றான்.
வரலட்சுமி விரத நியதிகள்...
ஆடி அல்லது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிகள் இந்த விரதத்தைக் கடைப் பிடிப்பார்கள்.
அன்றைய தினம் பசுஞ்சாணத்தால் வீடு மெழுகி கோலமிட்டு வீட்டிலுள்ள அனைவரும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். விரதமிருக்கும் பெண்கள் கண்டிப்பாக உபவாசம் இருக்க வேண்டும்.
பூஜையறையில் மண்டபம் போல் மேடை அமைத்து, அம்மண்டபத்தில் தரையில் நெல்லைப் பரப்பி அதன் மீது தாம்பாளத்தினை வைத்து அதில் அரிசியைப் பரப்பி, அதன் மேல் வெள்ளி அல்லது செம்பால் செய்யப்பட்ட கலசத்தில் காதோலை, கருகமணி, வளையல் உள்ளிட்ட பொருட்களை இட வேண்டும். பின் அநத செம்பின் வாயில் மாவிலைகளைச் செருகி, கலசத்தின் மேல் தேங்காய் வைத்து செம்பிற்கும் தேங்காய்க்கும் மஞ்சள் பூசி சந்தனப்பொட்டு வைத்து குங்குமம் இட்டு பூச்சூடி அலங்கரித்து வைக்க வேண்டும்.
அந்தக் கலசத்தின் முன் வெள்ளியால் செய்த வரலட்சுமி முகத்தை செருகி வைத்து பூஜையைத் தொடங்கி விரதத்துக்கு வேண்டிய நோன்புக் கயிறை கலசத்தின் மீது சாத்த வேண்டும்.
பிறகு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து கற்பூரம் ஏற்றி பிள்ளையாருக்கு தூப தீபம் காட்டி வழிபட்ட பின் வரலட்சுமி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
தீபங்கள் எரிய, ஊதுபத்திகள் மணம் பரப்ப, சுமங்கலிப் பெண்கள் தோத்திரப் பாடல்களைப் பாடியோ மந்திரங்கள் கூறியோ குங்குமத்தாலோ புஷ்பத்தாலோ அர்ச்சனை செய்யலாம். வேதம் அறிந்தவர்களை வைத்தும் பூஜை நடத்தலாம். “வரலட்சுமி வருவாயம்மா’ என்ற பாட்டைப்பாடி தேவியை உங்கள் இல்லாம் தேடி வரும்படி வேண்டுவது சிறப்பு.
நிவேதனப் பொருள்கள், சர்க்கரைப்பொங்கல், கொழுக்கட்டை பலகாரங்கள், சுண்டல் செய்து பழங்கள் வைத்துப் படைக்கலாம். பஞ்சபாத்திரத்தில்நீரில் துளசி போட்டு தீர்த்தமாக அனைவரும் பருகி நோன்புக் கயிறை கையில் கட்டிக் கொள்ள வேண்டும். சுமங்கலிப் பெண்களை வரவேற்று மங்களப் பொருட்களுடன் குங்குமம் வழங்கி ஆசிர்வாதம் பெற வேண்டும்.
இந்த வரலட்சுமி விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தால் கணவனுக்கு ஆயுள் பலமும் பெண்களுக்கு மாங்கல்ய பலமும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். இதோடு சுமங்கலி பூஜையும் செய்யலாம்.
ஒன்பது சுமங்கலிப் பெண்களை வரிசையாக நிறுத்தி, அவர்கள் பாதங்களின் கீழ் தாம்பாளத் தட்டு வைத்து நீரிட்டு அவர்களின் பாதங்களைக் கழுவி மஞ்சள், சந்தனம் பூசி, பொட்டிட்டு, மலர் தூவி வணங்கி அவர்களை அமர்த்தி இலைபோட்டு வடை பாயசத்தோடு உணவு படைத்து வழியனுப்ப வேண்டும்.
இவ்விரதம் இருப்பதால் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் உள்ளிட்ட மேலான நற்பலன்களும், ஆண்களுக்கு அனைத்துவித நன்மைகளும் கிட்டும்.

No comments: