Saturday, July 28, 2012

நீர்வழி தடங்களை சுத்திகரிக்க ரூ.300 கோடி நிதி: கூவம் ஆற்றில் நீச்சல் சாத்தியமாகும்?

நீர்வழி தடங்களை சுத்திகரிக்க ரூ.300 கோடி நிதி: கூவம் ஆற்றில் நீச்சல் சாத்தியமாகும்?

சென்னையின் பிரதான நீர்வழி தடங்களான அடையாறு, கூவம் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 300 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை நகரின் பொருளாதார மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, கட்டமைப்பு வளராததால், இயற்கை ஆதாரங்களில் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் "செத்து'விட்டதாக அண்ணா பல்கலை, கடந்த வாரம், அரசிடம் அறிக்கை கொடுத்தது. அதன்படி, இந்த நீர்வழிகளில், கலக்கும் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதி கழிவுநீரால், ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து, எந்த வகை உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நீர்வழிகளின் நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப் படுகிறது.
துவங்கவில்லை: முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, அடையாறு, கூவம் ஆறுகள் சுத்தப் படுத்தப் படும் என்று, அறிவிக்கப் பட்டது. ஆனால், அதற்கான முதல்கட்ட பணிகள் கூட துவக்கப் படவில்லை. ஆய்வின் பேரில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சில "மாஜி'க்கள் சிங்கப்பூர் பயணம் மட்டும் மேற்கொண்டனர். இந்த நிலையில், சென்னையின் பிரதான நீர்வழி தடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
அரசு உத்தரவு: இது குறித்து,நேற்று, அரசு வெளியிட்ட அறிக்கை விவரம்: சென்னை நகர நீர்வழி பாதைகளில் கழிவுநீர் கலக்க கூடிய, கூவம் ஆற்றில், 105 இடங்கள்; பக்கிங்ஹாம் கால்வாயில், 183 இடங்கள், அடையாறில், 49 இடங்கள் என, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக, 150 கோடி ரூபாயை தவணை முறையில் சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்திற்கு விடுவிக்கவும் உத்தரவிடப் பட்டு உள்ளது. இதன்படி, பிரதான கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், சிறிய அளவிலான குழாய்களை அகற்றி, அதிக லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் உந்து குழாய்கள் அமைத்தல், சாலையோரம் சிறிய கழிவுநீரேற்றும் நிலையங்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ள கழிவுநீரேற்றும் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றம் ஏற்கனவே உள்ள சிறிய அளவிலான கழிவுநீர் குழாய்களை பெரிய குழாய்கள் கொண்டு மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படும். இதன் மூலம் சென்னையில் சுத்திகரிக்கப் படாத கழிவுநீர் ஆறுகளுடன் கலப்பது தடுத்து நிறுத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

1 comment:

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ said...

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு 23/12/2014 அன்று கோரிக்கை வைத்தேன் (எண்: 2014/812990/CR). 06.01.2015 அன்று பதில் வந்தது.

கோரிக்கை:
பக்கிங்ஹாம் கால்வாய் தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய். சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. 1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோமீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20 -ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது. இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. 2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியது. தற்போது யாருக்கும், எதற்கும் உபயோகம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. எனவே, மீண்டும் பக்கிங்காம் கால்வாய் நீர்வழிப்பாதை திட்டம் மேம்படுத்தப்பட்டால் போக்குவரத்தில் தமிழகம் மிகச்சிறப்பான இடத்தை பெறும். இலட்சக்கணக்கான மக்கள் பயளடைவார்கள். நமது அரசு செய்யுமா?

வந்த பதில்:
The scheme for utilising the Buckingham canal as on inland water ways is under the consideration of the National Inland Waterway Authority and the same would be implemented in due course. Petitioner informed vide EIC WRD PWD Chepauk ch-5 lr.no.S7/CMP/CR/2014 dt 05.01.15.

- பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ