Friday, September 6, 2013

கைக்குழந்தைக்கு விளக்கெண்ணை கொடுப்பது நல்லதா


கைக்குழந்தைக்கு விளக்கெண்ணை கொடுப்பது நல்லதா



நுரையீரலில் தொந்தரவு இருந்தால் அது இருதய வால்வை பாதிக்குமா, என தெரியப்படுத்துங்களேன்?
 
இருதய வால்வில் தொந்தரவு இருந்தால், அது நுரையீரலை பாதிக்கும். நுரையீரலில் நீர்தங்குதல் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும். அதேபோல வால்வில் கிருமி தொற்று இருப்பின், அது நுரையீரலில் "நிமோனியா' போன்ற நோய்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதேபோல நுரையீரல் தொந்தரவு இருந்தாலும் அது வலதுபக்க இருதயத்தை பாதிக்கும்.
நுரையீரலும், இருதயமும் வண்டியின் இருசக்கரங்கள் போன்றவை. இரண்டும் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கை பயணம் சிறப்பாக அமையும். ஏதேனும் ஒன்றில் தொந்தரவு இருக்கும்பட்சத்தில், மற்றொன்றையும் சோதனை செய்து பிரச்னை உள்ளதா என தெரிந்து கொள்வது நல்லது. பிரச்னை இருந்தால் உடனடியாக அதற்கான மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. வருமுன் காப்பது சிறப்பு.
என் கைக்குழந்தைக்கு, வாரம் ஒருமுறை விளக்கெண்ணையை நன்றாக சூடுபடுத்தி, ஆறவைத்து குடிக்க வைக்கிறோம். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதா? இதனால் பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா?
இயற்கைக்கு ஈடு இணையான செயற்கை எதுவும் கிடையாது. இருப்பினும் குழந்தை என்பதால் நாம் சிலவற்றை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் போன்ற பொருட்கள் கசப்பு தன்மையுள்ளவை. அதன்அடர்த்தி அதிகம். ஆகவே அவற்றை கொடுக்கும்போது, மூச்சுத் திணறி நுரையீரலுக்குள் சென்றால் பிரச்னைதான். அங்கு காற்று செல்லும் பைகளை அவை சூழ்ந்துகொள்ளும். அதனால் காற்றோட்டம் சரியாக இல்லாமல் குழந்தை மூச்சுவிட சிரமப்பட வேண்டியதிருக்கும். அவற்றை அகற்றுவதும் கடினம். இதனால் லிபாய்டு நிமோனியா என்ற பிரச்னையை சந்திக்க வேண்டியதிருக்கும். குழந்தைகளுக்கு இதுபோல பொருட்களை கொடுக்காமல் இருப்பது நல்லது.
சிகரெட் புகைப்பவர்களுக்கு, நுரையீரல் விளம்பரத்தில் காட்டுவது போல உண்மையிலேயே கருமையான நிறம் ஆகிவிடுகிறதா?
ஆமாம். சிகரெட்டில் 800க்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்கள் உள்ளன. ஒருவர் புகைபிடிக்கும்போது இந்த நச்சுப் பொருட்கள் நுரையீரலில் சென்று அப்படியே படிகிறது. நாளாக, நாளாக நுரையீரலின் நிறம் மாறத் துவங்கிவிடும். பிராங்கேஸ்கோபி என்ற பரிசோதனையில், நுரையீரலுக்குள் டியூப் செலுத்தி பார்த்தால், புகைபிடிப்போரின் நுரையீரல் கருப்பாக இருப்பதை கண்கூடாக பார்க்கலாம்.
புகைபிடிப்பவர்கள் உடனடியாக அதை நிறுத்துவது நல்லது. புகைபிடிப்போர் தனக்கு மட்டுமின்றி, தன் குடும்பத்திற்கும், தன் அருகில் இருக்கும் அனைவருக்கும் இந்த பாதிப்பை பரிசாக கொடுக்கின்றனர். ஆம், புகை பிடிப்போர் மட்டுமல்ல, அவர்கள் அருகில் இருப்பவர்களும், அதிகமாக புகையை சுவாசிக்க நேரும். அனைவரும் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425-24147
நன்றி தினமலர்

No comments: