Thursday, September 12, 2013

பருத்தி சாகுபடியில் உயர்விளைச்சல் பெற முக்கிய தொழில்நுட்பங்கள்

பருத்தி சாகுபடியில் உயர்விளைச்சல் பெற முக்கிய தொழில்நுட்பங்கள்: உயர்விளைச்சல் ரகங்களை தேர்ந்தெடுக்க சீரிய உழவியல், நீர், களை நிர்வாகம், ஒருங்கிணைந்த உர மேலாண்மை, தேவைக் கேற்ப பயிர் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.
இவற்றுள் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இயற்கை எருக்களான தொழு உரம், மண்புழு உரம், மக்கிய தென்னை நார்க்கழிவு, செயற்கை உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட், மூரியேட் ஆப் பொட்டாஷ் உரங்களையும், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் அசடோபேக்டர் உரங்களையும் நுண்ணூட்டச்சத்துக் கலவையுடன் சேர்த்து சமச்சீர் உணவாக அளிப்பதுதான் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் ஆகும்.
ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் இடுவதால் மண்ணின் அங்ககத்தன்மை நிலைநிறுத்தப்பட்டு விளைச்சலையும் அதிகமாக பெறலாம். ஆடு கிடை போடுதல், மக்கிய குப்பை ஆகியன முறையே கடைபிடிக்க வேண்டும்.
மண் ஆய்வு அடிப்படையில் உரங்களை இடவேண்டும். மண் ஆய்வு செய்யப்படாத நிலமாக இருந்தால், பொதுவாக பரிந்துரைக்கப்படுகிற உரஅளவை இடவேண்டும். உரங்களில் 50 சதவீத யூரியாவையும் மணிச்சத்து, சாம்பல்சத்துக்கள், முழுவதையும் அடியுரமாக இடவேண்டும். மீதமுள்ள 50 சதவீத யூரியாவை விதைத்த 45வது நாள் மேலுரமாக இட்டு மண் அணைக்க வேண்டும். வீரிய ஒட்டு ரகங்களுக்கு யூரியாவை மூன்று பிரிவாக பிரித்து முதல் பகுதியினை அடியுரமாகவும், மீதமுள்ள இரு பகுதிகளை நட்ட 45, 65வது நாட்களில் இடவேண்டும்.
நுண்ணூட்டச்சத்து இடுதல்: தமிழகத்தில் பெருவாரியாக உள்ள இடங்களில் துத்தநாகம், இரும்பு, போரான் மற்றும் மக்னீசியம் ஆகிய நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையாக உள்ளது. இதனால் பருத்தியில் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதைச் சரிசெய்ய தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் (அ) தமிழ்நாடு வேளாண்மைத் துறையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள நுண்ணூட்டக் கலவையை எக்டருக்கு 12.5 கிலோவை சுமார் 40 கிலோ மணலுடன் கலந்து விதைத்தவுடன் அல்லது விதைத்த 3 நாட்களுக்குள் நிலத்தில் தூவ வேண்டும்.
இலைவழி உரமிடுதல்: ஒரு கிலோ யூரியாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து 45, 65 நாட்களில் இலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.
விளைச்சல் ஊக்கிகள் தெளித்தல்: நாப்தலின் அசிடிக் அமிலம் (என்ஏஏ) 40 பிபிஎம் கரைசலை மொட்டு விடும் பருவத்தில் தெளிக்க வேண்டும். முதல் முறை தெளித்து ஒரு மாதம் கழித்து இரண்டாவது முறையாக 90ம் நாள் தெளிக்க வேண்டும். 40 மில்லி நாப்தலின் அசிடிக் அமிலத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்தால் 40 பிபிஎம் கரைசல் கிடைக்கும். இதனால் மொட்டுகள் உதிர்வது குறைக்கப்படுகிறது. சப்பைகள் மற்றும் பிஞ்சுகள் அதிகமான அளவில் உதிர்வதைத் தடுக்க 1 லிட்டர் நீரில் 1 மிலி பிளானோபிக்ஸ் மருந்தினை கலந்து பருத்தி நட்ட 60, 90வது நாட்களில் இலைவழியாக தெளிக்க வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக காட்டன் பிளஸ்: இதை இலைவழியாக தெளிப்பதால் பருத்தியில் பூ, சப்பைகள் உதிர்வது குறைந்து காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழிவகுக்கிறது. மேலும் வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கிறது. இதை ஏக்கருக்கு 2.5 கிலோ, பூக்கும் பருவத்திலும், காய் பிடிக்கும் பருவத்திலும் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இருமுறை தெளிக்க வேண்டும். (தகவல்: முனைவர் அ.அனுராதா, முனைவர் வி.கணேசராஜா, வேளாண்மை அறிவியல் மையம், ராமநாதபுரம்-623 503. போன்: 04567-230 359)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

No comments: