Wednesday, September 11, 2013

வாழ்வுக்கு வழிகாட்டும் வான்கோழிகள் வளர்ப்பு

வாழ்வுக்கு வழிகாட்டும் வான்கோழிகள் வளர்ப்பு

22வெள்ளி,பிப்ரவரி

பிராய்லர் கோழிகள் மிக மெதுவாக அறிமுகமாகி இன்றைக்கு இறைச்சி என்றால் பிராய்லர் தான் என்றாகி விட்டது. இது போல் இன்னும் குறுகிய காலத்தில் வான்கோழி இறைச்சியும் இறைச்சி பிரியர்களிடம் குறிப்பிடத்க்க இடத்தை பிடிக்கும் என்று கருதப்படுகிறது. எனவே பண்ணை தொழிலில் கவனம் செலுத்துபவர்கள் வான்கோழி வளர்ப்பை இப்பொழுதே தொடங்கினால் சந்தையை தக்க வைத்துக் கொள்ளலாம். வான்கோழிகளை வளர்க்கும் முறை குறித்தும், அதன் லாபம் பற்றியும் தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் டாக்டர்கள் பூவராஜன், உமாராணி மற்றும் பண்ணை முருகானந்தம் ஆகியோர் விவரிக்கிறார்கள்.
" குறைந்த தீவனம் உட்கொண்டு அதிக எடை கூடுவதாலும், குறுகிய காலத்தில் துரிதமாக வளர்ச்சி பெறுவதாலும் வான்கோழி வளர்ப்பு லாபகரமானதாக இருக்கிறது. தோப்புகள், மானவாரி நிலங்களில் பண்ணைகளை அமைக்கலாம். இறைச்சிக்காக இவற்றை வளர்க்கும் போது கீழ்க்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும்.
பண்ணையில் கொட்டகை அமைத்தல்
ஒரு வான்கோழிக்கு 3 முதல் 4 சதுர அடி இடம் என்ற கணக்கில் 500 வான்கோழிகளுக்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 சதுர அடியில் 20 அடி அகலத்தில் கொட்டகைகளை கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். உள்புறம் சிமெண்ட் பூச்சு அவசியம். பக்கவாட்டில் ஒன்றரை அடி உயரத்தில் சுவர் எழுப்பி அதற்கு மேல்  அடி அளவுக்கு கம்பி வலை பொருத்த வேண்டும். தரையில் நெல் உமி அல்லது தென்னை மஞ்சியை பரப்ப வேண்டும்.
குஞ்சுகள் வாங்கி பராமரித்தல்
வான்கோழி இனத்தில் இறைச்சிக்கான சிறந்த இனங்களாக அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ், சிலேட்டு நிற கலப்பினம் அல்லது பெல்ஸ்வில்லி கலப்பினம் ஆகிய இனங்களை நம்பிக்கையான இடத்தில் வாங்க வேண்டும். ஒரு மாத குஞ்சுகளாக வாங்கி வளர்த்தல் நல்லது. ஏனென்றால், புதிதாக பண்ணை தொடங்குவோர் அவற்றை பராமரிக்க ஆலோசனை மற்றும் குஞ்சு பராமரிப்பு என இறப்பு சதவீதத்தை கட்டுப்படுத்தலாம்.
வான்கோழி குஞ்சுகளை அடைகாப்பானில் வைத்தல்
இளம் குஞ்சுகள் முதல் 3 வார வயது வரை செயற்கை வெப்பம் அளித்தல் வேண்டும். இதற்கு ஒன்றரை அடி உயர அட்டை அல்லது தகட்டினை 6 அடி விட்டத்திற்கு வைக்க வேண்டும். அடைகாப்பானின் நடுவில் தரையிலிருந்து 2 அடி உயரத்தில் மின்விளக்குகள் பொருத்தி எரிய விடவேண்டும். ஒரு 6 அடி விட்டமுள்ள அடைகாப்பானுக்குள் 150 குஞ்சுகள் வரை விடலாம். குஞ்சுகளுக்கு நாள் ஒன்றிற்கு 5 அல்லது 6 முறை தீவனம் சிறிது சிறிதாக வைக்க வேண்டும்.
வான் கோழி குஞ்சுகளுக்கு தீவனம் வைத்தல்
வான்கோழி குஞ்சுகளுக்கு முதல் 4 வாரங்களுக்கு 28 சதவீதம் புரதம் அடங்கிய தீவனம் அளிக்க வேண்டும். 
மாதிரி தீவனம்
மக்காசோளம்/ கம்பு - 40 சதவீதம், சோயாபுண்ணாக்கு- 38%, மீன்தூள்- 95%, தவிடு வகைகள்- 10%, எண்ணெய்- 1%, தாதுஉப்பு- 3%, உயிர்சத்துகள்- 50 கிராம்.
நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு
இதில் மேற்கூறிய தீவனத்தில் மக்காச்சோளம்/கம்புவின் அளவை 45 சதவீதமாகவும், பிண்ணாக்கின் அளவை 8 சதவீதமாக குறைத்தும் தாதுஉப்பின் அளவு அரை சதவீதம் கூட்டியும் தயாரித்தல் வேண்டும்.
8 முதல் 12 வாரங்களுக்கு
மக்காச்சோளம்/கம்பு- 45%, சோயாபுண்ணாக்கு- 31%, மீன்தூள்-10%, தவிடு-10%, எண்ணெய் 1%, தாதுஉப்பு மற்றும் உயிர் சத்துகள் 4%.
தீவனங்கள் பெரும்பாலும் குஞ்சுகள் வாங்கும் இடத்தில் 3 முதல் 4 மாதத்திற்கு தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. குச்சி தீவனமாக இருப்பின் நல்லது. காரணம் இதில் அனைத்து சத்துகளும் சமசீரான அளவில் கிடைக்கிறது. தீவனம் வீணாவது குறைவு. தீவன மாற்று திறன் அதிகரிக்கிறது.
நோய் பராமரிப்பு
குஞ்சுகளுக்கு முதல் வார வயதில் ராணிகெட் நோய் தடுப்பு மருந்தும், பின்னர் அம்மை தடுப்பு ஊசியும் 1 மாத இடைவெளியில் அளித்தல் அவசியம். தீவனத்தில் ரத்த கழிச்சல் நோய்க்கான தடுப்பு மருந்தையும் 3 வது வார வயதில் அளிக்க வேண்டும்.
வான்கோழி இறைச்சி விற்பனை 
வான்கோழிகளை 12 முதல் 16 வார வயதில் விற்பனை செய்து முடித்திட வேண்டும். 9 முதல் 12 வார வயதில் 3 கிலோ எடையும், 11 வார வயதில் 4 முதல் 5 கிலோ எடையும் இருக்க வேண்டும். தீவனம் முறையே 4 கிலோவும், 6 கிலோவும் உட்கொண்டிருத்தல் வேண்டும். இந்த வயதிற்கு பிறகு இறைச்சி முற்றி விடுவதால் உண்பதுற்கு மிருதுவாக இருக்காது. ஆகவே வான்கோழிகளை 12 முதல் 16  வார வயதிற்குள் உள்ள இறைச்சியாக இருக்கும் போது விற்பதும், வாங்குவதும் நல்லது. பிரியாணி உள்பட பிராய்லர் இறைச்சி மூலம் தயாரிக்கப்படும் அனைத்து அயிட்டங்களையும் வான்கோழி இறைச்சியிலும் பண்ண முடியும். 

திட்ட அறிக்கை

தோப்புகளில் 1 மாத குஞ்சுகளாக 500 குஞ்சுகள்வளர்க்க
( 1 குஞ்சு ரூபாய் 150 வீதம்)                            - 75 ஆயிரம்

அன்றாட செலவுகள்                                  
தீவன செலவு ( ஒரு குஞ்சுக்கு 15 ரூபாய் என்ற அளவில்)
500 குஞ்சுகளுக்கு                                     - 45 ஆயிரம் 

பண்ணையாள் கூலி                                   - 8 ஆயிரம்
( மாதம் 2 ஆயிரம் வீதம் 4 மாதங்களுக்கு)

தடுப்பு மருந்துகள் ( ஒரு குஞ்சுக்கு 1. 50 காசு வீதம்)        -  750 ருபாய்.
இதர செலவுகள்                                       - 1, 200 ருபாய்.

ஆக மொத்தம்                                         - 54 ஆயிரத்து 950 ரூபாய்.

வருமானம்
500 கோழிகள் ( 4 கிலோ எடையில்)
1 கிலோ எடையுள்ள கோழி 120 ரூபாய் என்ற விலையில்    - 2 லட்சத்து 28 ஆயிரம்

நிகர வருமானம்

ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் - 54 ஆயிரத்து 950 = 1, 33 ஆயிரத்து 525.
 நிகரலாபமானது தீவன செலவு, மருந்துகள் செலவு மற்றும் விற்பனை விலையை பொறுத்து பண்ணைக்கு பண்ணை மாறுபடும். இதனை கவனத்தில் கொண்டு விற்பனை வழிமுறைகளை எளிதாக்கி குறிப்பிட்ட கால அளவில் குஞ்சுகளை இறைச்சிக்கென்று விற்பனை செய்து சிறந்த லாபம் பார்த்திடலாம். வான்கோழி இறைச்சி இன்னும் குறுகிய காலத்தில் உணவில் சிறப்பான இடத்தை பிடிக்கவுள்ளது. எனவே இப்போதே பண்ணையை தொடங்கிவிடலாம்.

No comments: