Wednesday, March 13, 2013

முலாம் பழச் சாகுபடியில் கூடுதல் மகசூல்!

முலாம் பழச் சாகுபடியில் கூடுதல் மகசூல்!

        தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ள பகுதிகளில் மா, வாழை போன்று முலாம் பழம் சாகுபடியிலும் நல்ல மகசூல் பெறலாம் என்று பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் இணையத்தின் வேளாண் அலுவலர்கள் கூறினர்.

           இதுகுறித்து அவர்கள் கூறியது: தருமபுரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. மா, வாழை போன்ற பயிர்களைப் போன்று நல்ல வருவாயைத் தரக்கூடிய முலாம் பழம் சாகுபடியில் விவசாயிகள் இப்போது அதிக ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளனர். முலாம் பழம் சாகுபடியில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் நோய், பூச்சித் தாக்குதல்களிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம்.
            நல்ல வடிகால் வசதி கொண்ட மணல்பாங்கான பகுதி முலாம் பழம் சாகுபடிக்கு ஏற்றது. அமில, காரத் தன்மை 6.5 முதல் 7.5 என்றளவில் உள்ள மண்ணில் நல்ல வளர்ச்சி இருக்கும். மிதமான வெப்பநிலை (23 முதல் 27 சென்டிகிரேட்), மிதமான ஈரப்பதம் கொண்ட கால நிலை முலாம் பழம் சாகுபடிக்கு உகந்தது. மழை, பனி இல்லாத அனைத்துப் பருவத்திலும் முலாம் பழம் சாகுபடி செய்யலாம்.
விதைப்பு, பராமரிப்பு முறை: சாதாரணமாக நேரடியாக விதைப்பு செய்தும், துல்லிய பண்ணைய முறையில் குழித்தட்டு நாற்றாங்காலில் நாற்றுகளை உற்பத்தி செய்தும் நடவு செய்யலாம். விதைப்பிற்கு ரகத்தைப் பொருத்து ஏக்கருக்கு 200 கிராம் முதல் 1 கிலோ வரை விதைகள் தேவைப்படும். துல்லிய பண்ணைய முறையில் ஏக்கருக்கு 6 ஆயிரம் நாற்றுகள் வரை தேவைப்படும்.
               விதைகளை கிலோவுக்கு 10 கிராம் என்றளவில் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். நடவு இடைவெளி 1.5 மீட்டருக்கு 45 முதல் 65 செ.மீ. என்ற அளவில் பராமரிக்க வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 16:14:12 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும். மேல் உரமாக விதைத்து 30ஆவது நாள் 16 கிலோ தழைச்சத்து இட வேண்டும்.
          துல்லிய பண்ணைய முறையில் அடியுரமாக மணிச்சத்தை இட்டுவிட்டு, தழை, சாம்பல் சத்தை நீர்வழி உரப்பாசனமாக கரையும் உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
           நடவு செய்த அல்லது விதைத்த 35ஆவது நாளில் நுண்ணூட்டக் கலவையை லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். இதன்மூலம் வடிவற்ற காய்கள், காய்களில் வெடிப்பு போன்று போரான் சத்துக் குறைபாட்டால் உண்டாகும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மேலும், ஒரு வாரம் கழித்து பொட்டாசியம் சல்பேட் லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிப்பதால் பழங்களின் தரம் அதிகரிக்கும்.
            இதுமட்டுமல்லாது நெகிழி நிலப் போர்வை (பாலீதின் மூடாக்கு) அமைப்பதன் மூலம் களையால் உண்டாகும் பாதிப்பு குறையும். மேலும், பாசன நீரின் தேவையும் குறையும். கூடுதல் நன்மையாக பழங்கள் நிலத்தில் படுவதால் உண்டாகும் அழுகல் நோய், நிறமாற்றம் ஆகியவை தவிர்க்கப்படுகின்றன. இந்தப் பயிர் குறுகிய காலப் பயிர். ஆதலால், நெகிழி நிலப் போர்வை இடுவதன் மூலம், ஒரு பயிர் முடிந்தவுடன் அதிலேயே 2 அல்லது 3 பயிர்களைச் சாகுபடி செய்ய இயலும்.
பயிர்ப் பாதுகாப்பு: இந்தப் பயிரில் பழ ஈ தாக்குதல் ஏப்ரல் முதல் மே மாதத்திற்கு பின் அதிகமாகக் காணப்படும். கோடைக் காலத்தில் குறைவாகவும், மழைக் காலத்தில் அதிகமாகவும் இருக்கும். காய்களின் மேலுள்ள தோலைக் கிழித்து தாய் ஈ முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், காயின் சதைப் பற்றான பகுதியை உண்ணுவதால் அந்த இடத்திலிருந்து பழுப்பு நிறச் சாறு வடியும். புழுக்களால் தாக்கப்பட்ட பகுதி அழுகிவிடும். பாதிப்பு அதிகரிக்கும் போது காய்கள் உதிர்ந்துவிடும்.
                இவ்வாறு தாக்கப்பட்ட காய்களைச் சேகரித்து மண்ணில் குழியெடுத்து அழிக்க வேண்டும். தாக்குதல் உள்ள போது கொடி, கொடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் பாய்ச்சி கூட்டுப் புழுவிலிருந்து வளர்ந்த ஈக்கள் வெளிவருவதைத் தடுக்க வேண்டும். கொடிகளுக்கு இடையே உள்ள பகுதியை நன்றாகக் கிளறி விடுவதன் மூலம் கூட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் 2 கிராம் அல்லது பென்தோயேட் 2 மி.லி. அல்லது பென்தியான் 1.5 மி.லி. அல்லது கார்போசல்பான் 2 மி.லி. என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
பூசணிக்காய் வண்டு: கொடியின் வேர்ப் பகுதியையும், தண்டுப் பகுதியையும் மண்ணிலுள்ள புழுக்கள் தின்று சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இலைகள், பூக்கள், காய்களையும் தின்று சேதப்படுத்தும். செடியைச் சுற்றியுள்ள பகுதியில் மண்ணைக் கிளறி, செடி ஒன்றுக்கு 50 கிராம் கார்பரில் 50 சதவீத நனையும் தூள் அல்லது 5 கிராம் பிப்ரோனில் குருணை அல்லது 5 கிராம் கார்போபியூரான் குருணை மருந்தை இட வேண்டும்.
அசுவணிப் பூச்சித் தாக்குதல்: இலையின் அடிப் பகுதியில் இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் சாற்றை உறிஞ்சும். இதனால், இலைகள் சுருங்கி மடிப்புகளுடன் காணப்படும். கொடி வளர்ச்சி குன்றி காணப்படும். பூச்சிகள் தேனை கழிவாக வெளியேற்றுவதால், தாக்கப்பட்ட செடியில் எறும்பின் நடமாட்டம் காணப்படும். ஒரு லிட்டர் தண்ணீரில் அசிபேட் 1 கிராம் அல்லது தயோகிளோபிரிட் 1 மி.லி. என்றளவில் தெளிப்பதன் மூலம் இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
             இந்த பயிரில் சாம்பல் நோய், இலைப்புள்ளி நோய், இலைக் கருகல் நோய், பழ அழுகல் நோய், வாடல் நோய்த் தாக்குதலும் இருக்கும். மேற்கண்ட பூச்சித் தாக்குதல், நோய்த் தாக்குதலிலிருந்து பயிரைக் காத்து கூடுதல் வருவாய் பெறலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: வேளாண் அறிவியல் இணையம், பாப்பாரப்பட்டி, தருமபுரி மாவட்டம். மொபைல்: 99946 72204.

நன்றி:தினமணி

No comments: