Monday, March 11, 2013

மூட்டு வலியை குணப்படுத்த ஆயுர்வேத சிகிச்சை

தினசரி வாழ்க்கையில் நீங்கள் காலை எழுந்திருக்கும் போது முழங்காலை மடக்க முடியாமல் போய்விடுகிறதா? கால் தாங்கலாகத் தான் நடக்க வேண்டியிருக்கிறதா? கடந்த காலத்தில் இப் பிரச்சினை வந்து, தீர்ந்து தீர்த்து தற்போது உறக்கத்தில் யாரோ அழுத்துவது போன்ற உணர்வு வருகிறதா? நீங்கள் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது பாம்ஸ் மற்றும் தைலம், பாப்பிங் பில்ஸ் ஆகியவை உபயோகிக்கும் போது மட்டும் வலியிலிருந்து நிவாரணம் பெறுகிறீர்களா?

அனேகமாக நீங்கள் மூட்டு வலி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் மகாலிங்கபுரம் ஆயுர்வேத சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஸ்வரராவ். பருவ கால மாற்றங்கள் நம் உடலில் சில குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக மழைக்காலம் வந்தாலே பல்வேறு நோய்த் தொல்லைகள் வந்து விடும். மரத்துப்போன மூட்டு இணைப்பில் நடுக்கத்துடன் கால்தாங்கலாக நடக்க வேண்டிய நிலையும் மழைக்காலத்தில் வரும் மோசமான உடல் பாதிப்பாகும்.

உடலில் ரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு அரணாக இருக்கின்றன. நோய் எதிர்ப்பு செல்கள், நீண்ட நேரம் உடல் செல்களுக்கும், தீங்கிழைக்கும் மற்ற பொருள்களுக்குமிடையேயான வேறுபாட்டை அறிவதில்லை. இதனால் அவை உடல் செல்களை தாக்க ஆரம்பிக்கின்றன. முழங்கால் மூட்டிலுள்ள சவ்வு இதனால் வீக்கமடைந்து விறைப்பு தன்மை அடைந்து சிவப்பாக மாறும்.

இவற்றுடன் மூட்டு வலியும் ஏற்படுகிறது. மோசமான நோய் பாதிப்பினால் சில நேரங்களில் மூட்டுகள் செயலிழந்து விடுகின்றன. இந்நேரத்தில் இந்நோய் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மனிதனுக்கு இயற்கையாகவே உற்பத்தியாகி வளரக் கூடியது நகம், முடி, மூட்டுகளுக்கு இடையே உள்ள சவ்வு. இவை மூன்றும் மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப வளரும் தன்மை உடையது. இதில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியது சவ்வு. இது ஆயுர்வேதச் சொல்லில் ஆமா வாத்தா என்று அழைக்கப்படுகிறது. ஆமா என்றால் பித்தம். வாத்தா என்றால் வாயு என்றும் பொருள்படும்.

மூட்டு வலி வருவதற்கு மிக முக்கிய காரணம் மூட்டுகளுக்கு இடையே ஒரு வித எண்ணெய் திரவம் போன்ற ஒரு பொருள் இருக்கும். அவை மூட்டுகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவையும் இணைந்து செயல்படும். இந்த வாயுவும், பித்தமும் ஒன்றோடு ஒன்று இணைந்து எண்ணெய் திரவம் போன்ற பொருளை அழித்துவிடும்.

இதன் காரணமாக மூட்டுகள் இரண்டும் ஒன்றுக்கொன்று உரசும். இதனால் மூட்டுகளுக்கிடையே தேய்மானம் ஏற்படுவதால் மனிதனுக்கு மிக கடுமையான மூட்டு வலி ஏற்படுகிறது. இந்த வலியில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு பெரும்பாலானவர்கள் அப்போது சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஏதாவது தற்காலிக வலி நிவாரண மாத்திரைகளை உண்டு தப்பித்துக் கொள்கிறார்கள்.

இதன் காரணமாக கடுமையான மூட்டு வலியில் இருந்து முழுமையான நிவாரணம் அடைய அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் மூட்டு வலியை தொடர்ந்து அடையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

வழி முறைகள்.........

இந்த கடுமையான மூட்டு வலியில் இருந்து முழு நிவாரணம் பெற முடியும். அதற்கு முழுமையான தீர்வு காண முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவெனில் ஆயுர் வேத சிகிச்சை மூலம் முழு நிவாரணம் பெற முடியும். தொடர்ச்சியாக 3 மாதம் முதல் 6 மாதம் வரை மருந்து வகைகளை உண்டு வந்தால் இந்த கடுமையான மூட்டு வலியில் இருந்து 100 சதவீதம் முழு நிவாரணம் பெறமுடியும்.

தேய்ந்த மூட்டு சவ்வை புதியதாக உருவாக்க முடியும். ஆயுர்வேத மருந்து வகைகள் புதிய சவ்வை உருவாக்க வழி செய்கிறது. ஆயுர்வேத மாத்திரை மருந்துகளால் எவ்வித பக்க விளைவுகள் இல்லை. இதை சாப்பிடும் போது எவ்வித பத்திய முறைகளும் இல்லை என்கிறார் மகாலிங்கபுரம் அப்பல்லோ ஆயுர்வேதிக் சென்டர் டாக்டர் மகேஸ்வரராவ்.

மூட்டு வலி ஏற்பட காரணங்கள்.........

* கால்மூட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது.

* முட்டியின் முன்பகுதியில் வலியிருக்கும். மாடிப்படி ஏறி இறங்கும் போது மற்றும் சாயும் போது வலியின் தன்மை அதிகரிக்கும். ஓட்டப்பந்தைய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இவை ஏற்படும்.

* எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள், வெளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும்.

* சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறு சிறு காயங்கள்.

*முட்டியின் சிப்பி இட மாற்றம் அடைவது.

* மூட்டுகளில் நோய் தொற்றுவது.

* மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் இரத்த கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும்.

* இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள். இதனால் இடுப்பில் வலி ஏற்படும். இந்த வலி முட்டிப் பகுதிகளில் உணரப்படும். இடுப்பிலிருந்து முட்டி பகுதிக்கு செல்லும் கயிறு போன்ற அமைப்பில் காயம் ஏற்படுதல்.

* அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பமான கால சூழலில் இருத்தல்.

* குறிப்பிட்ட காலத்தில் மூட்டு இணைப்பு சவ்வு வளராமை மற்றும் சாதா ரணமாக முழங்கால் மூட்டுகள் மீது போர்த்தப்படாமை.

* வழக்கத்திற்கு மாறாக  அதிக உடல் எடை அதிகரிப்பு.

* மோசமான உடல் பாதிப்பு மற் றும் நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டிருத்தல்.

* ஏதாவதொரு எலும்பு மூட்டு தசையில் ரத்தம் உறைந்து விடு தல்.

*மூட்டு நோய்களை சாதாரணமாக வரும் வலியை வைத்து கண்டறியலாம். காலையில் விழிக்கும் போது அதிக வலியுடன் விறைப்பு தன்மை உடலிலிருந்தால் அதை நோய் அறிகுறி என அறியலாம். வயதானவர்கள் இதனால் அதிகம் இயங்க முடியாது. குளிர் காலங்களில் உடற்பயிற்சி மற்றும் நடக்கும் போது அதிக வலி ஏற்பட்டால் அது நோய் அறிகுறியாகும்.

வலியைக் குறைக்க உதவும் வழிகள்.........

வலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்த்து (உதாரணம்- பழுதூக்குதல்) ஓய்வாக இருந்தல். வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கவும். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.

கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம். சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும்.

இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30-லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம். தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.

ஒரு மேசை கரண்டி டில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.

இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தையும் குறைக்கலாம். 5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்பட வேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்

No comments: