Thursday, August 15, 2013

காற்றிலிருந்து நீர் உற்பத்தி !

காற்றிலிருந்து நீர் உற்பத்தி !

தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் குறைந்து வருவது அனைவரும் அறிந்ததே. பெரும்பான்மையான போர்வெல்களில் தண்ணீர் இல்லை. அரசு போர்வெல்களிலும் அதே நிலை. இதை சமாளிக்கும் விதத்தில் மதுரை மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகபடுத்த உள்ளது.

அதாவது காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீராக மாற்றும் ‘வாட்டர் மேக்கர்’ என்ற இயந்திரத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸிதிரேலியா, அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியத் தீவுகளில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி காற்றிலிருந்து கிடைக்கும் நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், குஜராத், கொல்கத்தா, திரிபுரா மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் வைகை ஆறு பொய்த்து போன நிலையில், இந்த ஆண்டு போதுமான மழையும் கிடைக்காததாலும், வார்டுகளில் இருக்கும் போர்வெல்லில் தண்ணீர் குறைந்ததாலும் இந்த திட்டம் மதுரை மாநகராட்சி மூலம் தமிழகத்தில் முதன்முறையாக நடைமுறைக்கு வர உள்ளது.

செயல்படும் விதம் அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பமான பகுதிகளில், ‘வாட்டர் மேக்கர்’ இயந்திரத்தின் செயல்பாடு, அபரிதமாக இருக்கும். சராசரி வெப்பநிலை, 25 டிகிரி செல்ஷியல் முதல், 32 டிகிரி செல்ஷியசிலும், ஈரப்பதம் 70 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை இருக்கும் நிலையில், திறனுக்கேற்ற நீரை உற்பத்தி செய்யும். 120ல் துவங்கி, 5,000 லிட்டர் வரை, நாள் ஒன்றுக்கு குடிநீர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
"முதலில், குடிநீர் பற்றாக்குறையான பகுதிகளில், காற்றின் ஈரப்பதத்திலிருந்து, குடிநீர் உற்பத்தி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன் பலனைப் பொறுத்து, அனைத்து பகுதிகளிலும் ‘வாட்டர் மேக்கர்’ முறையில், குடிநீர் வினியோகம் செய்யப்படும், என்று தெரிவிக்கிறார் மதுரை மாநகர மேயர் ராஜன் செல்லப்பா.

No comments: