Monday, September 3, 2012

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு பயிரை அறுக்கும் கருவி

கரும்பில் அதிக மகசூல் எடுப்பதற்கான தொழில்நுட்பம் “நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி’ தொழில்நுட்பமாகும். இதற்கு 500லிருந்து 650 கிலோ விதைக்கரும்பு போதுமானதாகும். பருக்களுடன் சிறிது கரும்புத் தண்டும் பெயர்த்து எடுத்து பிளாஸ்டிக் குழித்தட்டில் மக்கிய தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு எரு இட்டு பருவை குழியில் நட்டு வைத்து இத்தட்டுக்களை பசுமைக்குடிலில் வைத்து நாற்று உற்பத்தி செய்து தரமான நாற்றுக்களை வளர்க்க வேண்டும். ஒரு மாத வயதுடைய நாற்றுக்களை / வயலில் 5 அடிக்கு 2 அடி இடைவெளியில் நட்டு சாகுபடி செய்ய வேண்டும். இதற்கு ஏக்கருக்கு 4450 நாற்றுக்கள் வேண்டும். நாற்று முளைக்காத போக்கிடம் நடுவதற்கு அந்த மாதிரி சூழல் வராது. வந்தால் மொத்தமாக 4600 நாற்றுக்கள் போதுமான தேவையாகும்.
கரும்பு நாற்றை வரிசையில் 2அடி இடைவெளி விட்டு நடும்போதே தாய்ப்பயிரோடு பக்கத்தூரும் இரண்டு அல்லது ஒன்று குறுகிய நீளத்தில் வளர்ந்திருக்கும். வயலில் நட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பயிரை பூமிமட்டத்திலிருந்து இரண்டு அங்குலம் விட்டு அறுத்துவிட வேண்டும். இதனால் மேலும் அதிக தூர்கள் வளரும். இது பக்கத்தூரையும் புழு குருத்தையும் சேதப்படுத்துவதால் நமக்கு கரும்பின் எண்ணிக்கை குறையும். ஆனால் தாய்ப்பயிரை அறுத்துவிடுவதால் மேற்கண்ட செயல்பாடு நடக்காது. இளங்குருத்துப் புழுவால் இயற்கையாக நடப்பது, அறுத்துவிடுவதால் செயற்கையாக இங்கு செய்கிறோம். இயற்கையாக புழுவால் நடப்பது பக்கத்தூரையும் தாக்கி அழிக்கும். அதனால் அது நமக்கு நல்லதில்லை.

Image taken from www.science.howstuffworks.com
சில ரக இளங்கரும்புப் பயிரின் தண்டில் முசுமுசு என்று முள்ளு மாதிரி சொணை இருக்கும். அது ஆட்களைக் கொண்டு அறுத்துவிடும்போது கையில் குத்தும். வேலையாட்கள் கீழே குனிந்துதான் அரிவாள் கொண்டு அறுத்துவிட வேண்டும். இந்த இடையூறுகளினால் வேலை ஆட்களின் வேலை பாதிக்கும். இதைக்கருத்தில் கொண்டு சுலபமாக வேலை நடக்கவும், வேலைஆட்களின் கைகளில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் செய்யவும் ஒரு கருவி உருவாக்கப்பட்டது. படத்தில் உள்ளவாறு இருக்கும் கருவியைக் கொண்டு இளங்கரும்புப் பயிரின் தாய்ப்பயிரை ஆட்களின் உதவியால் அறுத்துவிடலாம். இக்கருவியை உபயோகிக்கும்போது கீழே குனியவும், தண்டை பிடிக்கவும் வேண்டாம். எந்தப்பயிரை அறுத்துவிட வேண்டுமோ அந்தப் பயிரை கருவியால் நின்றுகொண்டே அறுத்துவிட்டு நடந்துசெல்லலாம். நாமே காலை வேளை இரண்டு நாட்களில் ஒரு ஏக்கர் பயிரை அறுத்துவிட்டு வேலையை முடிக்கலாம். அறுத்த பயிரை மாட்டிற்கு தீனமாகக் கொடுக்கலாம். இளம் பயிராக இருப்பதால் மாடும் நன்கு சாப்பிடும்.
அதற்குப்பிறகு சொட்டு நீர்ப் பாசனத்தோடு உரக் கலவையையும் பயிருக்கடியில் கொடுக்கும் போது பயிர் சத்தையும் நீரையும் எடுத்துக் கொண்டு அதிக எண்ணிக்கையில் பக்கத்தூரை வளரச் செய்யும். பக்கத் தூர்களின் வயதும் ஏறத்தாழ ஒரே சீராக இருக்கும். அதனால் ஒவ்வொரு தூரும் கரும்பாய் மாறும். கரும்பின் உயரமும் தடிமனும் அதிகரிப்பதால் ஒரு கரும்பின் எடையானது அதிகரிக்கும். இப்படி ஒவ்வொரு கரும்பின் எடை கூடுவதால் ஒரு குத்தின் எடை அதிகரிக்கும். இதனால் வயலின் இருக்கிற ஒட்டுமொத்த கரும்பின் மகசூல் அதிகரிக்கும்.
தினமலர் தகவல்: முனைவர் கு.கதிரேசன், இயக்குனர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு), டி.என்.ஏ.யு.,கோவை. 0422-661 1310.
-கே.சத்தியபிரபா, உடுமலை.

நெல் நாற்றங்காலில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

நாற்றங்காலில் நெல் நாற்றுவிடும் சமயத்தில் உருவாகும் பூச்சிகளை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இயற்கை வழியிலும், உயிர்ரக மருந்துகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.
தற்போது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் சம்பா பருவதுக்கான நெல் விதைகள் விதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நெல் நாற்றங்காலை, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் முறையாக பாதுகாக்க முடியும். சம்பா பருவ நெல் சாகுபடிக்காக,
  • வெள்ளைப் பொன்னி,
  • பொன்மணி (சி.ஆர். 1009) அல்லது சாவித்திரி,
  • பாபட்டலா, ஐ.ஆர். 20 மற்றும்
  • பின் சம்பா ரகமான ஆடுதுறை 39
போன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து சாகுபடிசெய்து வருகின்றனர்.
இவ்வாறு சாகுபடி செய்யும்போது ஒற்றை நெல் சாகுபடி முறைகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் விதைகள், நீர் மற்றும் உரங்களின் அளவு குறைந்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெற முடியும்.
உயிர்ரக பூச்சிக்கொல்லிகள்…
மேலும் நெல் நாற்றங்காலில் தோன்றக்கூடிய பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த தேவையில்லை.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத உயிர்ரக பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கும் பூச்சிகளை அழியாமல் பாதுகாக்க முடியும்.
நாற்றங்கால் தயார் செய்யும் போது நாற்றங்கால் படுக்கைகளை மேடான இடத்தில் அமைக்க வேண்டும்.
விளக்கு கம்பங்களுக்கு அருகிலேயே நாற்றங்கால் அமைக்கக் கூடாது. ஒரு சதுர மீட்டர் நாற்றங்கால் பரப்பளவில் உள்ள படுக்கைகளை 50 கிராம் பாக்டீரிய உயிர் ரக நோய்க்கொல்லியான சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் மற்றும் 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு அல்லது புங்கம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் கலந்து பின் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும்.
நாற்றங்காலில் விதை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் விதை மூலம் பரவும் நோய்கிருமிகளை பரவாமல் தடுக்கலாம்.
இலைப்பேன் தாக்குதல்:
விதை விதைத்த 10 நாள்களுக்குள் நாற்றின் முனைப்பகுதி கருகி, இலையானது சிறிது சிறிதாக மஞ்சள் நிறமாக மாறினால் அது இலைப்பேன் என்ற பூச்சி தாக்குதலின் அறிகுறியாகும்.
இதை உறுதி செய்ய உள்ளங்கையை நாற்றாங்கால் நீரில் நனைத்து நாற்றின் மீது தடவி உள்ளங்கையை திருப்பி பார்த்தால் கருப்பு நிறத்தில் சிறிய பேன்கள் இருக்கும்.
இதனை கட்டுப்படுத்த, ஒரு சென்ட் நாற்றாங்காலுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து அதனை விசை தெளிப்பான் கொண்டு நாற்றங்கால் இலையின் முனைப்பகுதியில் படும்படி பீய்ச்சி அடிப்பதால் இலைப்பேன்கள் கீழே விழுந்துவிடும். பின்பு நாற்றங்காலில் உள்ள தண்ணீரை வடிகட்டுவதன் மூலம் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
விசைத் தெளிப்பான் வைத்திராத விவசாயிகள், நாற்றங்காலை நீரில் 10 நிமிஷங்கள் முழுவதும் நனையுமாறு மூழ்கடித்து பின் நீரினை வடிகட்டுவதால் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
இதற்குப்பின் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 10 மில்லி 3 சத வேப்ப எண்ணெய்யை 10 கிராம் ஒட்டுத் திரவத்துடன்( டீப்பால், டிரைட்டான், சேண்டோவிட்) சேர்த்து நாற்றங்கால் இலைப்பரப்பில் தெளிப்பதால் இலைப்பேன்கள் கசப்பு தன்மை காரணமாக விலகி ஓடிவிடும் அல்லது இறந்துவிடும்.
குட்டைக் கொம்பு வெட்டுக்கிளி:
விதைத்த 10 லிருந்து 15 நாட்களுக்குள் தோன்றக்கூடிய குட்டைக் கொம்பு வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த வேப்பம் எண்ணெய்யே போதுமானதாகும்.
மேலும், நாற்றங்காலில் 10 “வி’ வடிவ குச்சிகள் வைப்பதால், பறவைகள், குருவிகள், மைனா, கோட்டான் போன்றவைகள் அதன்மீது அமர்ந்து குட்டை கொம்பு வெட்டுக்கிளிகளையும், இலை உண்ணும் புழுக்களையும், பறக்கும் தாய்பூச்சிகளையும் உண்டுவிடும்.
இலை சுருட்டுப் புழு:
நாற்றங்காலில் தோன்றக் கூடிய இலை சுருட்டுப்புழுவின் தாக்குதலை குறைக்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் “பெவேரியா பேசியானா’ என்ற உயிர்ரக பூச்சிக்கொல்லியை அதிகாலைப் பொழுதில் கைத் தெளிப்பான் மூலம் 200 லிட்டர் நீரினை பயன்படுத்தி தெளிப்பதால் புழுக்களின் மீது நோய் உருவாக்கி புழுக்களை அழிக்கலாம்.
பச்சை தத்துப்பூச்சி:
நாற்றங்கால் வயது 15 முதல் 20 நாட்கள் உள்ள தருணத்தில் நாற்றுக்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால் அது பச்சை தத்துப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறியாகும்.
இதை நிவர்த்தி செய்ய 5 சீத்தாபழங்களில் உள்ள கொட்டைகளை லேசாக இடித்து 1 லிட்டர் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் (12 மணி நேரம்) வைத்திருந்து அந்த சாற்றினை மறுநாள் காலையில் மெல்லிய துணியில் வடிகட்டி நாற்றங்காலில் தெளித்தால் கட்டுப்படும்.
செஞ்சிலந்தி தாக்குதல்:
தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக நிலவும் ஒடுக்கத்துடன் கூடிய அதிகமான வெப்பநிலையால் செஞ்சிலந்திகளின் தாக்குதல் நெல் நாற்றுக்களில் தோன்றி இலைகள் மீது சிகப்பு வண்ண திட்டுக்கள் ஏற்படும்.
இதனை கட்டுப்படுத்த ஒரு சத புங்கம் எண்ணெய் (1 மில்லி ஒரு லிட்டர் நீரில்) அல்லது டைக்கோபால் (1.5 மில்லி ஒரு லிட்டர் நீரில்) அல்லது நனையும் கந்தகம் (1 கிலோ 8 சென்ட் நாற்றங்கால்) தெளிக்க வேண்டும். இதன் மூலம் செஞ்சிலந்தி தாக்குதல் கட்டுப்பாடும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகள்:
நாற்றங்கால் வரப்புகளை புல், பூண்டு மற்றும் களைகள் இல்லாதவாறு நன்கு செதுக்கி சுத்தமாக வைத்திருப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் நாற்றங்காலை தாக்காதவாறு பாதுகாக்கலாம்.
இவ்வாறான முறைகளை பயன்படுத்தி விவசாயிகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் நாற்றங்காலை பாதுகாக்க முடியும். செலவும் விவசாயிகளுக்கு குறையும்.
தினமணி தகவல் புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் வல்லுநர் நி.விஜயகுமார்

தானிய வகைகளை புரடீனியா புழு தாக்குதல் இருந்து பயிர்களை காப்பது எப்படி?

பயறு வகை பயிர்களை புரடீனியா எனப்படும் புழுக்கள் தாக்கி அழிக்கின்றன.
இவ்வகை புழுக்களிடமிருந்து பயிர்களை பாதுகாக்கும் முறைகள் குறித்து இங்கு காணலாம்.
புதுச்சேரி மாநில விவசாயிகள் பெரும்பாலானோர் நிலக்கடலை, உளுந்து, பச்சைப்பயிறு, காராமணி, சோயா மொச்சை, பருத்தி, ஆமணக்கு, பச்சைமிளகாய், வாழை மற்றும் கனகாம்பரம் போன்ற பயிர்களை பயிரிடுகின்றனர்.
இப்பயிர்களில் புரடீனியா புழுக்கள் அனைத்து பருவங்களிலும் தாக்கி சேதத்தை உருவாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன.
மேலும், புரட்டீனியா புழுக்கள் காலிப்ளவர், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு மற்றும் புகையிலை போன்ற பயிர்களையும் தாக்கி அழிக்கின்றன.
புரொடனியா புழுக்கள்
புரொடனியா புழுக்கள்
இவ்வாறு பயிர்களில் தோன்றும் புரடீனியா புழுவினை கட்டுப்படுத்த “என்.பி.வைரஸ்’ எனும் உயிர் ரக பூச்சிக்கொல்லியை பயன்டுத்தலாம்.
புரடீனியா புழுக்கள், கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயிர்கள் மற்றும் இயற்கையாக வளரும் தாவர இனங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
இவற்றை புகையிலை புழு, ஆமணக்கு புழு என்றும் அழைக்கிறோம்.
இந்த வகை புழுக்கள் தமது ஒரு மாத கால வாழ்க்கை சுழற்சியில், 30 முதல் 35 நாட்கள் வயதுடைய பயிர்களை தாக்கி சேதப்படுத்தும்.
புரடீனியா புழுக்கள் ஆறு பருவ நிலைகளைக் கொண்டவை. அதன்பின், இவைகள் கூட்டுப் புழுக்களாக பூமியில் அல்லது மண்ணில் தென்படுகின்றன. பருத்தியில் காய்களையும், கனகாம்பரத்தில் கதிர்களையும் கூட வளர்ந்த நிலையில் உள்ள புழுக்கள் தாக்கும் திறன் கொண்டவை.
என்.பி.வைரஸ் நச்சுயிரி:
என்.பி.வைரஸ் உயிர் ரக பூச்சிக் கொல்லிகள் என்பது கண்ணுக்கு புலப்படாத வைரஸ் நுண்கிருமிகளால் ஆன நன்மை செய்யும் உயிரின கட்டுப்பாடு காரணியாகும்.
“வைரியான்’ என்ற உட்கருவினை கொண்ட அறுகோண வடிவமைப்பில் உள்ள இந்த வைரஸ் கிருமிகள் புரடீனியா புழுக்களை மட்டும் கொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவை ஆகும்.
என்.பி. வைரஸ் உயிர் ரக பூச்சிக்கொல்லியினை பயிர்களில் தெளிக்கும் போது அப்பயிர்களின் பாகங்களை உண்ணும் புரடீனியா புழுக்களின் வயிறு, குடல் பகுதிகளுக்கு வைரஸ் கிருமிகள் செல்கின்றன.
அங்கு அவை அதிகமாக உற்பத்தியாகி ரத்தத்தில் கலந்து 5-7 நாட்களில், புழுக்களின் அடிப்பாகத்தில் நோயை உண்டாக்கி அழித்துவிடும்.
இவ்வாறு நன்மை பயக்கும் என்.பி.வைரஸ் உயிர் ரக பூச்சிக்கொல்லி திரவ வடிவில் பிளாஸ்டிக் குடுவைகளில் 100 மி.லி. மற்றும் 250 மி.லி. அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் இப்பூச்சிகளின் தாக்குதல் அதிகம் இருப்பதால் இதனை பயன்படுத்தலாம். பூச்சிகளின் தாக்குதலுக்கு தகுந்தாற்போல் இதனுடன் கலக்க வேண்டிய வேறு சில பொருள்கள் குறித்து அருகில் உள்ள விவசாயத்துறை வல்லநர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம்.
கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:
என்.பி. வைரஸ் உயிரக பூச்சிக்கொல்லியை மாலை வேளைகளில் மட்டுமே தெளிக்க வேண்டும். மேலும் பயிர்களின் அனைத்து பாகங்களிலும் படுமாறு தெளிக்க வேண்டும்.
நல்ல தண்ணீரை தெளிப்பதற்கு பயன்படுத்தவேண்டும். இது தெளித்தால் ரசாயண பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தை 10 நாள்களுக்கு தவிர்க்க வேண்டும்.
உயிரிகளை பயன்படுத்தி பூச்சிகளை நிர்வகிப்பதன் மூலம் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி நன்மை பயக்கும் பூச்சி இனங்கள் அழியாமலும் பாதுகாக்கலாம்.
மேலும் பயிர் பாதுகாப்பு செலவினை குறைத்து விவசாயிகள் தங்கள் வருமானத்தை இழப்பின்றி பெருக்க முடியும்.
தினமணி தகவல் புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் வல்லுநர் நி.விஜயகுமார்

தர்ப்பூசணி சாகுபடியில் அதிக லாபம் பெற…

வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிடப்படுகிறது. இப்பயிரில் உள்ள பல ரகங்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும், மண் வகைகளிலும் குறைந்த செலவில் சாகுபடி செய்து அதிக லாபத்தை தரக்கூடியதாகும்.
விவசாயிகள் நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்து அதிக வருவாயைப் பெறலாம்.
தர்ப்பூசணி டிசம்பர் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள நெல் தரிசு நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.
  • அர்கா மானிக்,
  • அர்கா ஜோதி,
  • டி.கே.எம். 1,
  • சுகர்பேபி,
  • அசாகியமாடோ,
  • சார்லஸ்டன் கிரே,
  • அம்ரூத்,
  • பூசா பேடானா மற்றும்
  • விதை உற்பத்தி நிறுவனங்களால் வெளியிடப்படும் ரகங்கள் மற்றும்
  • வீரிய ஒட்டு
ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.

விதையும், விதை நேர்த்தியும்:
3 முதல் 4 கிலோ வரை நல்ல தரமான விதைகளாக தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். விதைகளையும், இளம் செடிகளையும் நோய் மற்றும் பூச்சிகள் தாக்கமலிருக்க ஒரு ஹெக்டேருக்கு விதையுடன் 4 கிராம் டிரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற பூஞ்சாணக் கொல்லி அல்லது 2 கிராம் கார்பண்டாசிம் அல்லது திரம் என்ற பூஞ்சாண மருந்தில் ஏதேனும் ஒன்றை கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.
நிலம் தயார் செய்தல்:
நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்ய உழவில்லா குழி நடவு முறையைப் பின்பற்றலாம். இம்முறையில் நெல் தரிசு நிலத்தில் உள்ள நெல் பயிர் அடித்தாழ் மற்றும் உளுந்துப் பயிரின் அடிச்சக்கையை நன்று சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
இவைகளை தர்ப்பூசணிக்கு மண் போர்வையாக அல்லது மண்புழு உரம் அல்லது மட்கு தயார் செய்ய பயன்படுத்தலாம். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட நிலத்தில் 15×15 மீட்டர் இடைவெளியில் 50x50x50 செ.மீ. குழிகளை அமைக்க வேண்டும்.
இக்குழியில் உள்ள மண்ணை நன்கு கடப்பாரை மற்றும் மண்வெட்டி போன்ற கருவிகளால் கொத்தி, விதை நடவுக்கு ஏற்ற வகையில் தயார் செய்ய வேண்டும்.
இங்ஙனம் தயார் செய்யப்பட்ட குழிகளில் அடிஉரம் இட்டு குழிக்கு 5 விதைகள் வீதம் நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் நட்டவுடனும், நட்ட மூன்று நாள் இடைவெளியில் மூன்று நீர்ப்பாசனம் முழுமையாக தர வேண்டும்.
உர நிர்வாகம்:
ஹெக்டேருக்கு 25 டன் தொழு உரத்துடன் 30:65:85 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை இட வேண்டும்.
இதில் பாதியளவு தழை, முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்துகளை உழவில்லா சாகுபடி முறையில் குழியமைக்கும் போதும், மீதமுள்ள தழைச்சத்தை இரண்டு பகுதியாக நட்ட 30 மற்றும் 60 நாள்களில் இட வேண்டும்.
தொழு உரத்துக்கு பதிலாக 25 டன் மக்கிய அல்லது சாண எரிவாயுக்கு பயன்படுத்திய கரும்பு ஆலைக்கழிவு அல்லது 2.5 டன் மண்புழு உரம் அல்லது 12.5 டின் செரிவூட்டப்பட்ட தாவரமட்கு அல்லது 2.5 டன் செரிவூட்டப்பட்ட தென்னை நார்க்கழிவு மட்குகளை பயன்படுத்தலாம்.
இத்துடன் ஹெக்டேருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை கலந்து பயன்படுத்த வேண்டும்.
நீர்ப்பாசனம்:
தர்ப்பூசணி சாகுபடிக்கு தகுந்த நீர்ப்பாசன முறையை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் அப்பருவத்தில் பாசன நீரின் அளவு மிகக்குறைவு. ஆழ்துளை கிணற்றுப் பாசன வசதியுள்ளவர்கள் நல்ல முறையில் தர்ப்பூசணி சாகுபடி செய்ய முடியும்.
இவர்கள் பாத்தி பாசனம் அல்லது சொட்டு நீர்ப் பாசனம் அல்லது தெளிநீர்ப் பாசனம் என வசதிக்கேற்ப பயன்படுத்தலாம். கிணற்றுப் பாசன வசதியில்லாதவர்கள் அருகிலிருந்து வடிகால் வாய்க்காலில் இருக்கும் தண்ணீரை குடிநீர் பாசன முறையில் பயன்படுத்தலாம்.
வளர்ச்சி ஊக்கிகள்:
எத்தரல் என்னும் பயிர் வளர்ச்சி ஊக்கியை 250 பி.பி.எம். (2.5 மி.லி எத்தரல் மற்றும் 10 லிட்டர் தண்ணீர்) கரைசலாக தயார் செய்து, விதை முளைத்து செடியில் 2 இலை மற்றும் நான்கு இலை உற்பத்தியாகும் சமயத்திலும், அடுத்து 15 நாள் இடைவெளியில் 2 முறை தெளிப்பதால் பெண் பூக்களின் உற்பத்தியை அதிகரித்து மகசூலை அதிகரிக்கலாம்.
புகைமூட்டம் போடுதல்:
எத்தரல் கரைசல் தெளிக்க இயலாதவர்கள், நட்ட 15 நாள்களிலிருந்து, 15 நாள்களுக்கு ஒருமுறை வயலில் ஒரு ஓரமாக காற்றடிக்கும் திசையில் புகைமூட்டம் போட்டால், அதிக பெண் பூக்கள் உற்பத்தியாவது அறியப்பட்டுள்ளது.
இது ரசாயன முறை சாகுபடியில் தெளிக்கும் எத்திலீன் என்ற வினையூக்கி தெளிப்பதற்கு சமமானது.
களை நிர்வாகம்:
செடி வளர்ந்து படரும் இடங்களில் உள்ள களைச் செடிகளை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
இலை வண்டு மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த மாலத்தியான் 50 இசி 1 மிலி அல்லது மிதைல் டெமடான் 25 இசி 1 மிலி தெளிக்கவும், சாம்பல் நோயை கட்டுப்படுத்த 1 மிலி டினோகாப் அல்லது கார்பண்டாசிம் 0.5 கிராம் லிட்டர் என்ற அளவில் நட்ட 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்.
அறுவடை: பூ மகரந்த சேர்க்கையடைந்ததிலிருந்து 40 நாள்களில் பழங்களை அறுவடை செய்யலாம். நன்குப் பழுத்த பழங்களை மட்டுமே அறுவை செய்ய வேண்டும்.
பழக்காம்பு காய்தல், பழத்தைத் தட்டினால் ஏற்படும் சப்தம் மற்றும் பழம் மண்ணில் படும் இடங்கள் பச்சை நிறத்திலிருந்து வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவற்றை கணித்து பழமுதிர்ச்சியை அறிந்து அறுவடை செய்யலாம்.
தமிழக விவசாயிகள் நெல் பயிரிடாத காலங்களில் நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்து ஹெக்டேருக்கு 50 முதல் 60 டன்கள் வரை மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம் என்கிறார் பேராசிரியர் கே.மணிவண்ணன்.
தர்ப்பூசணி டிசம்பர் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள நெல் தரிசு நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.
  • அர்கா மானிக்,
  • அர்கா ஜோதி,
  • டி.கே.எம். 1,
  • சுகர்பேபி,
  • அசாகியமாடோ,
  • சார்லஸ்டன் கிரே,
  • அம்ரூத்,
  • பூசா பேடானா மற்றும் விதை உற்பத்தி நிறுவனங்களால் வெளியிடப்படும் ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை
விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.
தினமணி செய்தி: பேராசிரியர் முனைவர் கே.மணிவண்ணன், வேளாண்புல தோட்டக்கலைத் துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம். சிதம்பரம்.

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்:--

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.


சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

· உடலை வலுப்படுத்தும்.

· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· குடல் புண்ணை ஆற்றும்.

· மலச்சிக்கலைப் போக்கும்

· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்

உணவுக் குழாய் கேன்சர் பற்றிய தகவல்கள் :-

உணவுக் குழாய் கேன்சர் பற்றிய தகவல்கள் :-

இதயத்துக்குப் பின்னால், நீளமான குழாய் போன்ற அமைப்பை உடையது உணவுக்குழாய். வாயையும், இரைப்பையையும் இணைக்கக் கூடிய தசையால் ஆன குழாய், 25 செ.மீ., முதல் 30 செ.மீ., நீளமானது; சுருங்கி விரியும். வாய், இரைப்பை இணையும் பகுதியில், மூடி போன்ற இரு வால்வுகளை கொண்டது. உணவு செல்லும் போதும், வாந்தி எடுக்கும் போதும் மட்டுமே இந்த வால்வுகள் திறக்கும்.வாய்
வழியாக உணவு சென்றதும், இயந்திரம் போன்று வேகமாக இயங்கி, உணவை வயிற்றுக்குள் தள்ளும் திறன் கொண்டது தான் இந்த உணவுக் குழாய். நாம் தலைகீழாக நின்று சாப்பிட்டாலும், உணவை வயிற்றுக்குள் அனுப்பும் திறன் வாய்ந்தது. உணவின் பயணம் இக்குழாயில் ஏழு நொடிகள். தண்ணீராக இருந்தாலும், திட உணவாக இருந்தாலும், இந்த நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

மூன்று வகை நோய்கள்: உணவுக்குழாயில் ஏற்படும் நோய்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1.வயிற்றில் சுரக்கும் அமிலத் தன்மையால் வரக்கூடிய உணவுக்குழாய் அழற்சி.
2. தசையால் ஆன உணவுக் குழாய் அமைப்பில் ஏற்படும் பாதிப்பு, சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும்
மாறுதல்.(அக்லேசியா).
3.உணவுக் குழாயினுள் சாதாரண கட்டிகள்,புற்றுநோய் கட்டி ஏற்பட்டு அடைப்பு ஏற்படுதல் (கேன்சர்).
இவற்றில், அமிலத் தன்மையால் வரக்கூடிய நோய், மக்களிடையே காணப்படுகிறது.

நோய்க்கான காரணங்கள்:
* இயற்கையான உணவுப் பழக்கங்களைத் தவிர்த்து, அதிக மசாலா, காரம், எண்ணெய் உள்ள பொருட்களை உண்பதால், வயிற்றில் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. உணவு ஜீரணத்துக்காக, வயிற்றில் அதிக அளவிலான அமிலம் சுரப்பதால், உணவுக் குழாயின் கீழ் உள்ள வால்வு பாதிப்படைகிறது.
* பொதுவாக, நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் கொழுப்புச் சத்துள்ள உணவுகளாலும் இந்த சூழ்நிலை
ஏற்படுகிறது. கலாசாரத்தின் பெயரால், மேலை நாட்டு உணவுப் பழக்கத்துக்கு செல்வது ஆபத்தானது. அதோடு, குடிப்பழக்கம், புகையிலை, பான்பராக்கு பயன்படுத்துதல், டாக்டர்கள் பரிந்துரை செய்யாத வலி மாத்திரைகளை பயன்படுத்துதல் போன்றவை, உணவுக்குழாய் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. பொதுவாக, கேன்சர் வர காரணமாக அமைவது புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் தான். பாஸ்ட் புட் பெயரில் தயாரிக்கப்படும் கொழுப்பு நிறைந்த உணவுகளால், இரைப்பையில் அமிலத் தன்மை ஏற்பட்டு பாதிப்பு வரும்.
* உடற்பயிற்சியே இல்லாதது, அமர்ந்த இடத்திலேயே வேலை செய்தல், பரபரப்பான வாழ்க்கை முறை
போன்றவை.
* உடல் பருமன் அதிகரிப்பதால், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரித்து, தொப்பை உருவாகிறது. தொப்பை வெளியே இருப்பதோடு, உள் பகுதியில் உள்ள இரைப்பையையும் அழுத்துகிறது. அழுத்தம் அதிகரித்தால், இரைப்பை அமிலம் உணவுக்குழாயின் வால்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
*அளவுக்கு அதிகமான சூட்டில் , காபி, டீ சாப்பிடுவதால், உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்படுகிறது.

அறிகுறிகள்: உணவுக்குழாய் பாதிப்பு ஏற்படுமானால், திட உணவை விழுங்க கடினமாக இருக்கும்; நெஞ்சு எரிச்சல் இருக்கும். உணவுக்குழாயின் கீழ் உணவு செல்லாமல், அதன் பாதையில் நின்றிருப்பது போன்ற உணர்வு ஏற்படும்; வலியும் ஏற்படும்.
* நாளுக்கு நாள், உணவு சாப்பிடக்கூடிய தன்மை குறைந்து, முற்றிலுமாக சாப்பிட முடியாத நிலை ஏற்படும். அமிலத் தன்மையுள்ள ஏப்பம் அடிக்கடி வந்து செல்வதும், உணவுப் பாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஏற்
படுத்தும்.
* ரத்த வாந்தி எடுத்தல், இருமல் வருதல், மூச்சு விட சிரமம் ஏற்படுதல் போன்றவையும் கூட, உணவுக்குழாயில் கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காட்டும்.

கண்டறிதல்: பொதுவாக, உணவின் பாதை யை முற்றிலும் அறிய, வீடியோ "எண்டோஸ்கோப்' முறை பயன்படுகிறது. இதில், குடலின் உள் பகுதியை ஒவ்வொரு அங்குல படமாக, "டிவி' திரையில் படமாகக் காணலாம். உணவுக்குழாயில் புண் உள்ளதா, கட்டி ஏற்பட்டுள்ளதா, தசைகள் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளதா போன்றவற்றைக் காண முடியும். "சிடி' ஸ்கேன் மூலம், வெளிப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய முடியும்.

சிகிச்சை முறை: உணவுக் குழாயில் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை, அதன் தன்மையைப் பொறுத்து மாறுபடும். உணவுக் குழாயில், மூன்று வகையான நோய்கள் ஏற்படுகின்றன. இதில், அமிலத் தன்மையால் ஏற்படும் புண்களை எளிதாக குணப்படுத்தலாம்.அக்லேசியா எனப்படும் இரண்டாம் வகை, உணவுக்குழாய் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் மாற்றம். உணவுக்குழாயில் ஏற்படும் சுருக்கம் (சிரோசிஸ்) மற்றும் வீக்கம், உணவுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில், இந்த வீக்கத்தை சரி செய்வது கடினமாக இருக்கும். அறுவை சிகிச்சை மூலம் இந்த உணவுக்குழாய் சுருக்கத்தை சரி செய்ய முடியும். எளிதாக இதை, லேப்ராஸ்கோபிக் சிகிச்சையில் சரி செய்யலாம்.உணவுக்குழாய் கேன்சர் ஆபத்தானது. முதல் கட்ட அளவில் உள்ள கேன்சரை எளிதாக குணப்படுத்த முடியும். உணவுக்குழாய் கேன்சர், ஆரம்ப கட்டத்தில் இருக்குமானால், எளிதாக எண்டோஸ்கோபி முறையிலான அறுவை சிகிச்சை முறையில் குணப்படுத்தலாம். அடுத்த சில கட்டங்களை தாண்டியிருந்தால், பாதிக்கப்பட்ட இடத்தை வெட்டி எடுத்து விட்டு, அங்கு செயற்கை உணவுக் குழாயை பொருத்துகின்றனர். அதிக அளவில் பரவிய கேன்சராக இருந்தால், கீமோதெரபி, கதிர்வீச்சு முறை போன்ற சிகிச்சை முறைகளை கையாள வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது, கடினமான சிகிச்சையாக இருக்கும்.

நெல்லிக்கனி பற்றிய தகவல் !!!!

நெல்லிக்கனி பற்றிய தகவல் !!!!

நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். நெல்லி ஓர் ஒப்பற்ற உணவு. ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையான நண்பன் எனலாம். இது உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும் இருக
்கும். மழைக்காலங்களில் கிடைக்கும்.

நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.
நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்.

நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்:

நீர்=82%
புரதம்=0.5%
கொழுப்பு=0.1%
மாவுப்பொருள்=14%
நார்ச்சத்து=3.5%
கால்சியம்=50 யூனிட்
பாஸ்பரஸ்=20 யூனிட்
இரும்பு=1.2 யூனிட்
வைட்டமின் C=600 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:

பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும். அருமையான கண் பார்வை தரும்.

நீண்ட ஆயுளுக்கு நாளும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும்.
பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.
மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.
குறிப்பு:

நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் C குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது.

மருத்துவக் குணங்கள்:

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை பதித்தவர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.

ஒரு நெல்லிக்கனியில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.

ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.
இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.