Monday, January 7, 2013

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும் -- வேம்பு

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-7
வேம்பு
மூலிகையின் பெயர் -: வேம்பு.
தாவரப்பெயர் -: AZADIRACHTA INDICA.
தாவரக்குடும்பம் -: MELIACEAE.

வேறு பெயர்கள் -: அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி ஆகியன.
பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியன.

வேதியல் சத்துக்கள் -: NIMBDIN, AZADIRACHTINE.

வளரியல்பு -: வேம்பு என்பது வேப்ப மரம் தான். மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாக்கீஸ்தானும் தான். பின் உலகம் முழுதும் பரவிற்று. காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது. ஆலமரத்தைப் போலவும், அரசமரத்தைப் போலவும் அனேக ஆண்டுகள் வளரக்கூடிய மரம் இந்த வேப்ப மரமாகும். இது சாதாரணமாக 30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது. நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். இது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம்.
பொதுவாக வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள். வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோசனம் தேவை. இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது. கூர் நுனிப் பற்களுள்ள சிறகுக் கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம். இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களிலும் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் எண்ணெயில் சோப்பு, மகளிர் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதன் புண்ணாக்கு உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் பயன் படுத்துவர். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் -:
வேம்பு கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.
வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.
வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.
வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.
வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.
வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.
உந்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீல் வாதம் தீரும்.

5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.

3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.

50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.
வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.
வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.
வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.
வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.
நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.
வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி இவை குணமாகும்.
வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.
வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.
வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.
எல்லாப் பிணிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது வேம்பு வேப்பிலை உருண்டையைத் தேய்த்துக் குளித்தால் புண்கள் குணமாகும்.
வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல துலக்கி வந்தால் வாய் துர் நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.
நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும்.
நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.

வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும்.

வேப்பிலை+ மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த குன்மம் தீரும்.
காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.

மருதாணி.

1) மூலிகையின் பெயர் -: மருதாணி.

2) தாவரப்பெயர் -: LAWSONIA INERMIS.

3) தாவரக்குடும்பம் -: LYTHRACEAE.

4) வேறு பெயர்கள் -: மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி ஆகியவை.

5) தாவர அமைப்பு -: மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 - 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும்,
இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள் இருக்கும்.இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். இது இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக வளர்கிறார்கள். விதையிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். இதை வாசனைப் பொருளாகப் பயன் படுத்துகிறார்கள். பாக்கீஸ்தானில் அதிகம் உபயோகிக்கிறார்கள். இதன் பூர்வீகம் வட ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும் பரவியுள்ளது. இதன் இலைகளை 5 நாட்கள் நிழலில் உலர்த்திப் பயன்படுத்துவார்கள். இதை விதை மூலமும், கட்டிங் மூலமூம் இனப் பெருக்கம் செய்வார்கள்.

6) இதில் உள்ள முக்கிய வேதியப் பொருட்கள் -: இலைகளில் க்ளூக்கோசைடு, லாசோம், சாந்தோம்கள் லாக்ஸ் தேன்கள் I,II, மற்றும் III. இதன் விதைகளில் பீட்டா ஐநோனோன் போன்ற வேதிய்ப் பொரிட்கள் உள்ளன.

7) பயன்படும் பாகங்கள் -: இலை, பூ, காய்,வேர் மற்றும் விதை போன்றவை.

8) மருத்துவப் பயன்கள் -: மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.

மேகநோய் -: பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம் அளவு 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும்கிரந்திப் புண், அரிப்பு ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.

தோல் நோய் -: மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.
புண்கள் - ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர -: இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.
உறக்கமின்மை : தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும்.. மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி -: இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

படைகள்- :கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

No comments: